உலகம்

ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபரால் பரபரப்பு

JustinDurai
நியூசிலாந்தில் ஒருவர் 24 மணி நேரத்தில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க பொதுமக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சில நாடுகளில் 3-வது தவணை அல்லது ‘பூஸ்டர் ஷாட்’ போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து நாட்டில் ஒரு நபர் ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''குறிப்பிட்ட ஒரு நபர் ஒரே நாளில் பல தடுப்பூசி மையங்களுக்குச் சென்று நிறைய தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளார். இதற்கு அவர் வெவ்வேறு நபர்களின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி இருக்கிறார். தடுப்பூசி போட யாருடைய பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, உண்மையில் அவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை. அவர்களது பெயரில், இந்த நபர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்'' என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில், நாங்கள் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். ஏனென்றால் பல தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே அவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால், உடனே தெரிவிக்கவும். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்லாந்து பல்கலைக்கழக தடுப்பூசி நிபுணர் ஹெலன் பெடோயிஸ்-ஹாரிஸ் கூறுகையில், ''இதுபோன்ற ஏராளமான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் விளைவு குறித்த தரவுகள் எதுவும் தற்போது இல்லை. அதனால், ஒரு நாளைக்கு 10 டோஸ்களை எடுத்துக் கொள்ளும் ஒருவருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என சொல்வது மிகவும் கடினம். ஆனால் அவ்வாறு எடுத்துக் கொள்வது நிச்சயம் பாதுகாப்பானது அல்ல'' என்றார்.