உலகம்

மனிதக் கழிவுகளின் மீத்தேன் எரிபொருளில் இயங்கும் ரயில் வண்டி!

மனிதக் கழிவுகளின் மீத்தேன் எரிபொருளில் இயங்கும் ரயில் வண்டி!

EllusamyKarthik

உலகம் முழுவதுமே எளிய மக்களின் விமானம் என்றால், அது ரயில் வண்டிதான். ஆகாயத்தில் பறக்கும் விமானப் போக்குவரத்து அளவிற்கு இல்லை என்றாலும், தரையில் ஊர்ந்தே செல்லும் ரயில் பலரது கனவுகளை சுமந்து செல்கிறது. இருப்பினும், உலகில் இயங்கும் பெரும்பாலான ரயில்கள் டீசலில்தான் இயங்குகின்றன. அது சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் பெருமளவில் ஏற்படுக்கின்றன.

இந்நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில் மனிதக் கழிவுகளில் உள்ள மீத்தேனை மின்சாரமாக மாற்றி, சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் இயங்கும் ரயில் வண்டியை வடிவமைத்துள்ளது,அல்ட்ரா லைட் ரயில் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம்.

பயோ அல்ட்ரா என்ற பெயரில் பிரிட்டனில் இயங்கும் இந்த ரயில் கார், மீத்தேன் வாயுவை மின்சாரமாக மாற்றி அதன் மூலம் பேட்டரிகளை சார்ஜ் செய்து இயங்குகிறது. 20 மீட்டர் நீளமுள்ள இந்த ரயில், மணிக்கு 50 மைல் வேகத்தில் செல்லும். தற்போது இதனை பொதுவெளியில் பிரபலப்படுத்துவதற்காக பத்து மீட்டர் நீளத்தில் மாதிரி ரயில் ஒன்றை இதன் வடிவமைப்பாளர்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளனர். 

டீசல் எஞ்சினில் இயங்கும் ரயில் வண்டி வெளிப்படுத்தும் நச்சு காற்றை, இந்த மீத்தேன் வாயுவில் இயங்கும் ரயில் வண்டியோடு ஒப்பிடும்போது எந்தவிதமான நச்சுக் காற்றையும் காற்றில் கலக்காது எனவும் இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ரயிலில் உள்ள எரிபொருள் டேங்கை ஒரு முறை நிரப்பினால் 2000 மைல்கள் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான தண்டவாளங்களிலே இந்த ரயிலை இயக்கலாம். அதேநேரத்தில் டீசல் ரயிலின் எடையை  காட்டிலும், இதன் எடை குறைவு என்பதால் ரயில் பாதையை பராமரிக்க செலவாகும், கட்டணமும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிச்சயமாக இது சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத ரயில் வண்டி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என தெரிவிக்கின்றனர் இதன் வடிவமைப்பாளர்கள்.