உலகம்

'இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சமாட்டோம்' - உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி திட்டவட்டம்

JustinDurai

ரஷ்யா விடுக்கும் இறுதி எச்சரிக்கை என்ற மிரட்டல்களை உக்ரைன் அரசு பணியாது என அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. கீவ் நகரில் ஒரு வணிக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து கீவ் நகரில் புதன்கிழமை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகம் ஏவுகனைகளை பதுக்குவதற்கு பயன்படுத்தப்பட்டதால் அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள மற்றொரு நகரான மரியுபோலிலும் அதி தீவிரமாக சண்டை நடைபெற்றுவருகிறது. இந்த நகரில் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய நேற்று வரை ரஷ்ய கெடு விதித்திருந்தது. இந்த நிலையில் ரஷ்யா விடுக்கும் இறுதி எச்சரிக்கைகளை ஏற்கமுடியாது என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் மக்கள் சரணடைய மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவுடன் எந்த போர் நிறுத்தம் செய்து கொள்வதாக இருந்தாலும் அது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டே முடிவெடுக்கப்படும் என்றும் செலன்ஸ்கி கூறியுள்ளார்.

இதற்கிடையே கருங்கடல் கரையோர துறைமுக நகரான ஒடேசாவின் புறநகர் பகுதிகளை ரஷ்ய படைகள் தாக்கியிருப்பதாக முதல்முறையாக அந்நகரின் மேயர் அறிவித்துள்ளார். இந்த பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: உக்ரைனில் ரசாயன ஆலையில் தாக்குதல் - 2.5 கி.மீ.க்கு கசிந்த அம்மோனியா வாயு!