Putin and Trump Reuters
உலகம்

புதினுக்கு ட்ரம்ப் செய்த 'Phone Call' முடிவுக்கு வருகிறதா உக்ரைன் போர்?

ட்ரம்ப்–புதின் பேச்சில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேசப்பட்டதாக தகவல்.

PT WEB

செய்தியாளர் : ஐடா அருட்செல்வி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் செப்டம்பர் 8ம் தேதி சுமார் ஒரு மணி நேரம் தொலைபேசியில் உரையாடினர். இதில் உக்ரைன் போர், அமெரிக்கா–ரஷ்யா உறவு, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் போர் கைதிகள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த உரையாடலுக்கு சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க சிறப்பு தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) மாஸ்கோ மற்றும் கீவ் நகரங்களுக்கு சென்றிருந்தனர். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் முயற்சியாக இந்தப் பயணம் அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Putin

உடனடி முன்னேற்றம் ஏற்படவில்லை என்றாலும், அந்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருந்ததாக ட்ரம்பும் புதினும் கருதியதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக எந்தவிதமான தாக்குதல் திட்டமும் ரஷ்யா தரப்பில் இல்லை என்று புதின் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று ட்ரம்ப் தெரிவித்ததாகவும் தனது அதிபர் பதவிக்காலத்திலேயே இதற்கு தீர்வு காண அவர் விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் முடிந்தால் அமெரிக்கா–ரஷ்யா உறவை மேம்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மீண்டும் வலுப்படுத்த முடியும் என்று ட்ரம்ப் கருதுவதாக கூறப்படுகிறது. எனினும், புதிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Putin and Trump

இருப்பினும், ரஷ்யா–உக்ரைன் இடையிலான போர் கைதிகள் பரிமாற்றத்தை தொடர்ந்து மேற்கொள்ள இரு தலைவர்களும் ஆதரவு தெரிவித்ததாக தெரிகிறது.

இதற்கிடையில், ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா இடையிலான அடுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் அல்லது சுவிட்சர்லாந்தில் அடுத்த சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.