முதல் உலகப் போர் காலத்திலிருந்தே ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இன்றைய உக்ரைன் - ரஷ்யா போர்தான் அதன் உலகளாவிய வடிவத்தையே மாற்றியமைத்திருக்கிறது. ஒரு காலத்தில் உளவு பார்க்க மட்டுமே பயன்பட்ட இந்த பறக்கும் கருவிகள், இன்று போர்க்களத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் முதன்மை ஆயுதமாக மாறியுள்ளன. ரேஸிங் விளையாட்டுகளுக்காகப் பயன்படுத்தப்படும் எஃப்.பி.வி சாதாரண ட்ரோன்களில், வெறும் கேபிள்களைக் கொண்டு வெடிபொருட்களைக் கட்டி, தரைக்கட்டுப்பாட்டு அறையிலிருந்து விஆர் ஹெட்செட் மூலம் வீரர்கள் இயக்குகிறார்கள்.
பல லட்சம் டாலர் மதிப்புள்ள பீரங்கிகளை, வெறும் 500 டாலர் மதிப்புள்ள இந்த குட்டி ட்ரோன்கள் துல்லியமாகத் தாக்கி அழித்துவிடுகின்றன. இதனால், ராணுவ டாங்கிகள் போர்க்களத்திலிருந்து பல கிலோமீட்டர் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த ட்ரோன்களை வீழ்த்த ரேடியோ அலைவரிசைகளை முடக்கும் 'எலக்ட்ரானிக் வார்ஃபேர்' ஜாமர்களை நாடுகள் பயன்படுத்தத் தொடங்கின. சிக்னல் உடைந்தால் ட்ரோன்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடும். இதையும் முறியடிக்க, இப்போது ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்துள்ளன.
மனிதர்களின் சிக்னல் தேவையே இல்லாமல், தாங்களாகவே இலக்குகளைக் கண்டறிந்து தாக்கும் அடுத்த தலைமுறை ஏஐ ட்ரோன்களின் தயாரிப்பு தற்போது தீவிரமடைந்துள்ளது. போர்க்களத்தில் இனி மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களும், ஏஐ தொழில்நுட்பங்களும்தான் மோதிக்கொள்ளப்போகின்றன என்பதற்கான ஆரம்பப் புள்ளிதான் இந்த ட்ரோன் யுத்தம்!