Zelensky and Putin  X
உலகம்

'Bio Terrorism..' ஆந்த்ராக்ஸை ஆயுதமாக்குகிறதா ரஷ்யா? உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு!

கெர்சன் பகுதியில் ஆந்த்ராக்ஸ் தொற்றிய கால்நடை சடலங்களை திட்டமிட்டு புதைத்து, உயிரியல் ஆயுதமாக்க ரஷ்யா முயல்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

PT WEB

2022 முதல் நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் போரின் நடுவில், கெர்சன் பகுதியில் ஆந்த்ராக்ஸ் தொற்றிய கால்நடை சடலங்களை ரஷ்யப் படைகள் பாதுகாப்பு, சுகாதார விதிகளை மீறி ஆழமற்ற குழிகளில் புதைக்கின்றன என்று உக்ரைன் உளவுத்துறை குற்றம் சாட்டுகிறது. இதனால் நிலத்தடி நீர், விவசாய நிலங்கள் நச்சாகி, மனிதர்களுக்கு உயிர்க்கு ஆபத்தான தொற்று பரவலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

செய்தியாளர் - M. மீரா

2022ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த மோதலில் 20 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய அமெரிக்க, சோவியத்–ரஷ்ய போர் உயிரிழப்புகளை விட பல மடங்கு அதிகம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உக்ரைனின் தற்காலிக ஆக்கிரமிப்புப் பகுதியான கெர்சன் (Kherson) பகுதியில், உயிரூக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆந்த்ராக்ஸ் (Anthrax) எனப்படும் பாக்டீரியா கிருமிகள் தொற்றிய கால்நடைகளின் சடலங்களை ரஷ்யப் படைகள் வேண்டுமென்றே போட்டு வருவதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை (DIU) குற்றம் சாட்டியுள்ளது.

Russia is dumping animals

பாதுகாப்பு நெறிமுறைகளையும் , சுகாதார விதிகளையும், கடைபிடிக்காமல் நோய்வாய்ப்பட்ட மாடுகளின் உடல்களை கெர்சன் பகுதியில் ரஷ்யா போட்டு வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் சுகாதார பேரழிவு ஏற்படும் என்று உக்ரைன் கவலை தெரிவித்துள்ளது.

சர்வதேச விதியின்படி தொற்று பாதிப்பால் இறந்த விலங்குகளின் உடல்களை எரித்து சாம்பலாக்க வேண்டும். ஆனால், ரஷ்யப் படைகள் இந்த ஆந்த்ராக்ஸ் சடலங்களை ஆழமற்ற குழிகளில் கொட்டி, அலட்சியமாகப் புதைத்து வருவதாக உக்ரைன் கூறுகிறது. கெர்சன் பகுதியில் இருக்கும் குடியிருப்புகளுக்கு அருகில், வெறும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த கால்நடைகளை புதைத்துள்ளனர். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

Russia Ukraine war

அதிக நிலத்தடி நீர்மட்டம் உள்ள பகுதிகளில் பல புதைகுழிகள் அமைந்துள்ளதால்,மாசுபடும் அபாயத்தில் உள்ளது என்று உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம், உக்ரைனின் விவசாய நிலங்களும், குடிநீர் ஆதாரங்களும் நிரந்தரமாக நச்சாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆந்த்ராக்ஸ் நோயை உருவாக்கும் Bacillus anthracis பாக்டீரியாவின் Spores கள், மண்ணிலும் நீரிலும் கலந்தால் கிட்டத்தட்ட 50 முதல் 100 ஆண்டுகள் வரை அழியாமல் வாழும் திறன் கொண்டவை. கால்நடைகளைத் தாக்கும் இந்த நோய், மனிதர்களுக்குப் பரவினால் கடுமையான சுவாசக் கோளாறை உருவாக்கி சில நாட்களில் மரணத்தை ஏற்படுத்தும்.

Ukraine - Russia war

தாங்களே ஆந்த்ராக்ஸ் கிருமிகளைப் பரப்பிவிட்டு, பின்னர் உக்ரைன் தான் உயிரியல் ஆயுதங்களை உருவாக்கி ரஷ்யப் படைகள் மீது தாக்குதல் நடத்துகிறது என்று சர்வதேச அரங்கில் பழிசுமத்த மாஸ்கோ திட்டமிடுவதாகவும் உக்ரைன் ராணுவ உளவுத்துறை எச்சரித்துள்ளது.