80 கோடி லாட்டரி முகநூல்
உலகம்

அடேங்கப்பா... அடித்தது ரூ. 80 கோடி லாட்டரி; 20 வயது இளைஞர் செய்த வியப்பான செயல்!

பல கோடிகளுக்கு அதிபதியானால் தலைகால் புரியாமல் மாறுபவர்கள் உண்டு. ஆனால், இதற்கெல்லாம் அப்பாற்பட்ட 20 வயது நபர் ஒருவரின் செயல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஒரு நொடியில் வாழ்க்கையே மாறிவிடும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் நம்மை சுற்றி பல விஷயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வறுமை நிலையில் இருக்கும் ஒருவருக்கு திடீரென விழும் பல கோடி லாட்டரி போலதான் வாழ்க்கை நொடியில் பலருக்கு மாறுகிறது.

அப்படி, திடீரென பல கோடிகளுக்கு அதிபதியாகும் நபர்கள் தலைகால் புரியாமல் மாறிவிடுவது உண்டு. ஆனால், இதற்கெல்லாம் அப்பாற்பட்டு செயல்பட்டுள்ளார் 20 வயது இளைஞர் ஒருவர். அவரின் அச்செயல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. என்ன நடந்தது? எங்கு நடந்தது? பார்க்கலாம்...

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் 20 வயதான கார்லிஸில் கிளர்க்சன். கேஸ் இன்ஜினியராக பணியாற்றி வரும் இவருக்கு லாட்டரி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. அவ்வப்போது, லாட்டரி வாங்கி வந்த இவருக்கு பெரியதாக பணம் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில்தான், கடந்த மாதத்தில் கிறிஸ்துமஸ் நேஷனல் லாட்டரியில் 120 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 12,676) இவருக்கு பரிசுத்தொகை கிடைத்துள்ளது. சிறிய தொகை என்பதால் பரிசாக கிடைத்த முழு பணத்திற்கும் லாட்டரியை வாங்கியிருக்கிறார். இதில்தான், 7.5 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.79.58 கோடி) அவருக்கு கிடைத்துள்ளது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், லாட்டரி அடித்த அடுத்தநாளே வழக்கம்போல தனது வழக்கமான பணிக்கு சென்றுவிட்டாராம் இந்த இளைஞர். கேஸ் இன்ஜியனரான இவர், அடைப்புகளை சுத்தம் செய்யும் பணிகளையும் செய்துவந்திருக்கிறார். 80 கோடி ரூபாய்க்கு அதிபதியான பின்னரும் அவர் அப்பணிக்கு சென்றிருப்பது, இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.

இது குறித்து கார்லிஸில் கிளர்க்சன் தெரிவிக்கையில், ”நான் என் காதலியின் வீட்டில் இருந்தேன். அன்று அதிகாலை பனிப்பொழிவு எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக எழுந்தேன். அப்போது லாட்டரி தொடர்பாக எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. நான் வெற்றிப்பெற்றுவிட்டேன் என்று அதில் இருந்தது. ஆனால், என்னால் அதை நம்ப முடியவில்லை. என் தந்தையிடம் ஃபோன் செய்து இதுப்பற்றி கூறினேன். அவர் வீட்டுக்கு வருமாறு கூறினார்.

வீட்டிற்கு சென்றதும் எனது சகோதரர், தந்தை என்று அனைவரும் எப்போது 9 மணி ஆகும் என காத்திருந்தோம். லாட்டரி அலுவலகம் திறந்ததும் போன் செய்து வின்னிங் நம்பரை உறுதி செய்து கொண்டோம். எனக்குத்தான் பரிசு விழுந்துள்ளது என்பதை உணர்ந்ததும் பைத்தியம் பிடித்தது போல கத்தினேன்.

எங்கள் வீட்டில் அனைவருமே இப்போது இந்த லாட்டரியில் விழுந்த பரிசு பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்னுடைய குடும்பம் பெரியது. அனைவருக்கும் இந்த விஷயம் தெரிந்து விட்டது ” என்றுள்ளார் மகிழ்ச்சியாக.

இளைஞரின் இந்த செயல் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.