model image
model image freepik
உலகம்

இங்கிலாந்து| ரூ.5 கோடியில் வெறும் ரூ.50 மட்டும் மிச்சம்.. தந்தையின் சொத்தை ஏமாற்றிச் செலவழித்த மகன்!

Prakash J

இங்கிலாந்தின் நோர்போக்கின் அட்டில்பரோவைச் சேர்ந்தவர் டேவிட் பிக்கல். இவரது தந்தை பீட்டர் பிக்கல். இவர், கடந்த 2015ஆம் ஆண்டு டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர், எந்த வேலையையும் செய்ய முடியாத அளவுக்கு படுத்தபடுக்கையாக இருந்தார். இதையடுத்து, நிதி சார்ந்த தேவைகளை நிர்வகிக்கும் பணியை டேவிட் பிக்கல் அவரது தந்தையிடம் இருந்து பெற்றுள்ளார்.

அவரிடமிருந்து இந்த அதிகாரத்தைப் பெற்றதுமுதல் டேவிட் பிக்கல் வங்கியிலிருந்த தொகை தவிர முதலீட்டுப் பத்திரங்களையும் பணமாக மாற்றி தன் இஷ்டத்திற்கு செலவழித்துள்ளார். அதுபோல் வீட்டையும் விற்று செலவழித்துள்ளார். இதன் மொத்த மதிப்பு 480,201 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.5 கோடி) ஆகும். இதற்கிடையே தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்த டேவிட் பிக்கல், அவரை பராமரிப்பதற்கான கட்டணத்தையும் செலுத்தாமல் இருந்துள்ளார்.

இதையும் படிக்க: 'தில்லுமுல்லு' பட பாணி: பொய் சொல்லி மேட்ச் பார்க்க லீவு.. நேரலையில் மேலாளரிடம் சிக்கிய RCB ரசிகை!

இதனால் அந்த தொகையும் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 85,000 பவுண்டுகளுக்கு மேல் (இந்திய மதிப்பில் ரூ.89 லட்சம்) கட்டணம் நிலுவையில் இருந்ததால் அவரை முதியோர் இல்லத்திலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. பீட்டரின் மோசமான நிதி நிலைமையை கண்டறிந்த அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போது, அவரது சொத்துக் கணக்கைச் சரிபார்த்தபோது மகன் இஷ்டத்திற்கு செலவழித்திருந்து தெரிய வந்தது.

model image

இதற்கிடையே கடந்த 2021ஆம் ஆண்டு பீட்டர் பிக்கல் மரணமடைந்தார். அப்போது அவரிடம் வெறும் ரூ.50 மட்டுமே இருந்துள்ளது. பீட்டர், தனது சொத்துககளைப் பிரித்து வாரிசுகள் 16 பேருக்கு கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தார். ஆனால், டேவிட் இப்படி ஏமாற்றியதைத் தொடர்ந்து மற்றவர்கள் அவர்மீது வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வயதான தந்தையை ஏமாற்றி மொத்த சொத்தையும் சுருட்டிய மகன் டேவிட் பிக்கலுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: புதிய உச்சம் தொட்டது இந்திய குடும்பங்களின் கடன் மதிப்பு.. குறைந்தது சேமிப்பு.. ஆய்வில் தகவல்!