உலகம்

”ID காட்டினாதான் டெலிவரி பண்ணுவேன்” வீடு வரை வந்துவிட்டு டெலிவரி செய்ய மறுத்த ஊழியர்; ஏன்?

JananiGovindhan

எப்போதுமே எவராலுமே ஸ்வீட் 16 ஆக இருந்திடவே முடியாது என்பது நிதர்சனமாக இருந்தாலும் உலகில் ஒரு சிலருக்கு எத்தனை வயதானாலும் பார்ப்பதற்கு இளம் வயதை ஒத்தோ அல்லது பருவ வயதை ஒத்த உருவத்தையே கொண்டிருப்பார்கள்.

அது இயற்கையாகவே அமைந்ததாகவும் இருக்கலாம் அல்லது ஏதேனும் உடல்நலம் ரீதியான காரணமாகக் கூட இருக்கலாம். அப்படியானவர்கள் எப்போதும் பொது சமூகத்தில் ஏதோ இளையவர்கள் போலவே உருவகப்படுத்தப்படுவார்கள்.

இப்படியான சம்பவங்களும் பல உலகின் பல இடங்களிலும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் லண்டனின் மிடில்ஸ்பரோ என்ற பகுதியைச் சேர்ந்தவர் வில்லியம் வில்ஃபோர்ட். இவருக்கு 37 வயதாகிறது. ஆனால் பார்ப்பதற்கு வாலிபரை போன்ற உருவத்தையே உடையவர்.

இங்கிலாந்தின் மிகவும் பிரபலமான டெலிவரி சேவை வழங்கி வரும் Sainsbury என்ற நிறுவனம் வில்லியமிற்கு அவர் ஆர்டர் செய்த பொருட்களையும் உணவுயும் கொடுக்க மறுத்திருக்கிறது.

மது, சிகரெட் போன்ற எதுவும் ஆர்டர் செய்யாத போதும் அவரது உருவத்தை பார்த்து டெலிவரி செய்ய வந்த ஊழியர் பொருட்களை கொடுக்காமல் சென்றிருக்கிறார். டெலிவரி ஊழியரிடம் வில்லியம் தன்னுடைய பிறப்பு சான்றிதழை காட்டியபோதும் அவர் மறுத்திருக்கிறார்.

cystic fibrosis மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள வெளியே அதிகமாக செல்ல முடியாததால் சைன்ஸ்பரியில் தன்னிடம் இருந்த பணத்தை வைத்து ஆர்டர் செய்திருந்தார். ஆனால் சைன்ஸ்பரியில் ரீஃபண்ட் செய்வதாகவும் அந்த தொகை மீண்டும் வர சில நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் வில்லியமிற்கு உணவும் கிடைக்காமல் இருந்த பணமும் பறிபோனதால் என்ன செய்வதென்று திணறியிருக்கிறார். இது தொடர்பாக பேசியுள்ள வில்லியம் “டெலிவரி நடந்த அன்று, என் வீட்டிற்கு வெளியே பொருட்களை வைத்த ஊழியர் என்னிடம் அடையாள அட்டையை காட்டச் சொன்னார். ஆனால் நான் ஆர்டர் செய்ததில் மதுவோ, சிகரெட்டோ இல்லாத போது ஏன் என கேட்டேன்.

அதற்கு அவர் இது எங்கள் நிறுவனத்தின் பாலிசி என்றார். ஆனால் என்னிடம் ஐ.டி. கார்டு எதுவும் இல்லாததால் பிறப்பு சான்றிதழை காட்டி  என்னுடைய உடல்நலன் குறித்து கூறிய போதும் டெலிவரி ஊழியர் கேட்பதாக இல்லை. அதேநேரம் ரீஃபண்ட் கிடைக்கும் எனக் கூறியதால் அதை வைத்து நேரடியாக கடைக்குச் சென்றாவது எதாவது வாங்கலாம் என நினைத்து அவை உடனடியாக வரும் என எதிர்பார்த்தேன்.” என லண்டனின் மெட்ரோ ஊடகத்திடம் கூறியிருக்கிறார்.

இது குறித்து அறிந்த சைன்ஸ்பரி வில்லியமின் பணத்தை திருப்பி கொடுத்தததோடு நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்திருக்கிறது.