உலகம்

இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதியவகை கொரோனா வைரஸ்!

webteam

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தலைநகர் லண்டனில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிறிஸ்துமஸுக்காக அறிவிக்கப்பட்ட தளர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கிய நிலையில், பாதிக்கப்பட்ட இடங்கள் Tier3, Tier 4 என வகைப்படுத்தப்பட்டன. பாதிப்பு அதிகமுள்ள Tier 4 பகுதிகளில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், லண்டன் போன்ற குறைவான Tier 3 பாதிப்பு பகுதிகளில், தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனிடையே இங்கிலாந்தில்தான் உலகிலேயே முதன்முதலில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது, முன்கள பணியாளர்களுக்கும், முதியவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், 67 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில்தான் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். லண்டன், தென்கிழக்கு, கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் மீண்டும் பொதுமுடக்கம் அமலுக்கு வருவதாக தெரிவித்த பிரதமர், அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என்றார். அத்தியாவசியமற்ற கடைகள், உள் அரங்க உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என்ற பிரதமர், இந்த தடை இன்று முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றார். கூடுமானவரை பயணங்களை தவிர்க்குமாறு பொதுமக்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதில், ’’நாட்டு மக்களை பாதுகாக்கும் வகையில் இக்கட்டான நேரத்தில் ஒரு பிரதமராக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியது எனது கடமை. புதிய வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் நாம் ஏற்கனவே திட்டமிட்டப்படி கிறிஸ்துமஸை கொண்டாட முடியாது என்பதை கனத்த இதயத்துடன் சொல்லிக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

முன்னதாக கிறிஸ்துமஸையொட்டி இங்கிலாந்து அரசு சில சலுகைகளை அறிவித்திருந்தது. Tier 3 பகுதிகளில் வசிப்போர்கள் 3 குடும்பங்கள் வரை இணைந்து, 5 நாட்கள் வரை ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அது தற்போது குறைக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் நாளன்று மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.