செய்தியாளர் - M. மீரா
அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதலில் ஹார்முஸ் நீரிணை தற்போது மோதலின் முக்கியப் பகுதியாக மாறியுள்ளது. இந்த மோதலால் ஹார்முஸ் வழியாக கப்பல்கள் செல்வதை ஈரான் பெருமளவில் தடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவும் ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் விளைவாக பல கப்பல்கள் தாக்கப்பட்டதுடன், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. உலகளாவிய பொருளாதாரத்திலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், ஹார்முஸ் வழியாகச் செல்லும் பாதை எந்த நேரத்திலும் ஆபத்துக்குள்ளாகலாம் என்பதை UAE உணர்ந்துள்ளது. இதனால் மாற்று வர்த்தக வழித்தடங்களை உருவாக்குவது அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்ற ஐக்கிய அரபு அமீரகம் (UAE) புதிய நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. எரிசக்தி, ஏற்றுமதி மற்றும் வர்த்தகம் எந்தவொரு கடல்வழியாலும் முடக்கப்படாத வகையில் மாற்றுப் பாதைகளை உருவாக்கி வருவதாக UAE தெரிவித்துள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற ஹிலி ஃபோரம் நிகழ்ச்சியில் பேசிய UAE அதிபரின் ஆலோசகர் கார்காஷ் நாட்டின் கிழக்குக் கடற்கரையில் துறைமுகங்களின் திறனை அதிகரித்து வருவதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, குழாய்கள், ரயில்வே மற்றும் மாற்று வர்த்தக வழித்தடங்களை உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறினார். எங்களுடைய எரிசக்தி ஏற்றுமதியும், வர்த்தகமும் யாராலும் பிணைக்கைதி ஆக்கப்படாது” என்று கார்காஷ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா–ஈரான் போரின்போது UAE-யும் ஈரானின் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது. ஈரான் 3,300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை UAE மீது ஏவியதாக கார்காஷ் தெரிவித்துள்ளார். அவற்றில் பெரும்பாலானவை UAE-யின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆனால், தாக்குதல்களில் பெரும்பாலானவை பொதுமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்ததாக UAE குற்றம்சாட்டியுள்ளது. இதனால் ஈரானுடனான உறவு எதிர்காலத்தில் மீண்டும் சீராகும் வாய்ப்பு இருந்தாலும், தற்போது ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மையை சரிசெய்ய பல ஆண்டுகள், ஏன் பல தசாப்தங்கள்கூட ஆகலாம் என UAE எச்சரித்துள்ளது.
வளைகுடா அரபு நாடுகள் ஈரானை எதிர்கொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த பதிலை உருவாக்கத் தவறிவிட்டதாகவும் கார்காஷ் விமர்சித்துள்ளார். ஒவ்வொரு நாட்டுக்கும் ஈரான் குறித்த கவலைகள் இருந்தாலும், அந்தக் கவலைகளை ஒரே பாதுகாப்பு உத்தியாக மாற்ற முடியவில்லை என்பதே அவரது குற்றச்சாட்டாக இருக்கிறது.
மேலும், ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் சுதந்திரமாகச் செல்வது யாரும் வழங்கும் சலுகை அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மொஹ்சென் ரெசாயி, ஹார்முஸ் நீரிணைக்கு வெளியே புதிய ’தடை மண்டலம்’ ஒன்றை அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில் ஹார்முஸ் வழியாகச் செல்லும் நோக்கத்துடன் நுழையும் கப்பல்கள் அடையாளம் காணப்பட்டால், அவை ஈரானின் தடைகள் பட்டியலில் சேர்க்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். இதனால் ஹார்முஸ் நீரிணை தொடர்பான அமெரிக்கா–ஈரான் மோதல் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.
இவ்வாறு ஹார்முஸை ஈரான் அழுத்தமாகப் பயன்படுத்தும் நிலையில், அந்த அழுத்தத்திலிருந்து தப்பிக்க UAE உருவாக்கும் மாற்றுப் பாதைகள் எதிர்கால வளைகுடா வர்த்தகத்தின் புதிய வரைபடத்தை உருவாக்குமா என்பதே முக்கியக் கேள்வியாக உள்ளது.