கனடாவில் கைதான ஹுவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரி மெங் வாங்சோவை, அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சட்ட அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஹுவாய் நிறுவனம் வெற்றிகரமாக இயங்குவதற்கு அதன் தலைமை நிதி அதிகாரி மெங் வாங்சோவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பணியில் சேர்ந்தது முதல், ஏற்றத்தை சந்தித்து வந்த மெங்குக்கு, தற்போது அமெரிக்காவால் முதன்முறையாக சரிவு ஏற்பட்டிருக்கிறது. தலைமை நிதி அதிகாரி மெங் வாங்சோவை,கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி வான்கூவர் நகரில் கனடா அரசு தடுப்புக் காவலில் கைது செய்தது.
ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்தபோது, அதை மீறி அந்நாட்டுக்கு உதவியிருக்கிறார் மெங். இதைத்தெரிந்து கொண்ட அமெரிக்கா, அவர் எந்த நாட்டுக்கு சென்றாலும் கைது செய்யப் போவதாக எச்சரித்திருந்தது. அதன்படியே கனடா சென்றிருந்த மெங்கை அமெரிக்கா பிறப்பித்த கைது உத்தரவு காரணமாக கைது செய்தது.
இந்நிலையில் மெங் வாங்சோவை, அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக அமெரிக்க சட்ட அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மார்க் ரெய்மோண்டி தெரிவித்துள்ளார். சட்டத்தை நிலைநாட்டுவதற்காக கனடா அளித்து வரும் ஆதரவு பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, நாடு கடத்தும் முயற்சியை அமெரிக்கா கைவிட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.மேலும் கைது உத்தரவை அமெரிக்கா வாபஸ் பெற்றுக் கொண்டால் மட்டுமே, அவரை விடுவிப்பதற்கான நடைமுறைகளை கனடாவால் தொடங்க முடியும் என வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.