செய்தியாளர்; ஐடா அருட் செல்வி
ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து 13 நாட்கள் மேற்கொண்டிருந்த ராணுவத் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அமெரிக்க பாதுகாப்புத் துறை அதாவது Department of Defense பகுதி ஒன்று பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவலில், ராணுவ நடவடிக்கைகள் தற்போது 'தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்துள்ளது. எனினும், கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தவில்லை என்றாலும், அந்த இரண்டு நாட்களிலும் எந்த ராணுவ நடவடிக்கையும் நடைபெறவில்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், போரை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்தபோது, துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் Dan Caine ஆகியோர் அதுகுறித்து கவலை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேநேரத்தில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக இரு தரப்பும் முரண்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றன. பேச்சுவார்த்தையில் ஈரான் தீவிர ஆர்வம் காட்டுவதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், ஈரான் ராணுவ அதிகாரி ஒருவர் அந்தக் கருத்தை மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் கடற்கரை பகுதியில் உள்ள சவுதி இலக்குகளை தாக்கியதாக தெரிவித்துள்ளனர். இதற்கு முந்தைய நாள், வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக சவுதி அரேபியா ஹவுதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தது.
இந்நிலையில், ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான கடற்படை முற்றுகை தொடர்வதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக எண்ணெய் கப்பல் ஒன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளது. மேலும், இந்த மாத தொடக்கத்தில் ஜோர்டானில் ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர் ஏஞ்சல் எஸ். ராம்பர்சாட் என்பவரும் அடங்குவதாக பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே, செங்கடல் பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் பெட்ரோல் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருப்பது தற்போது கவனம் பெறுகிறது.