அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இந்த மோதலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கத்தார் மற்றும் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததன் பேரில் 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்கா, ஈரானால் கையெழுத்திடப்பட்டது. தொடர்ந்து, இதுதொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தில் தொடங்கின. இதற்கிடையே, லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு மத்தியிலும் தாக்குதல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை உறுதி செய்யத் தவறியதற்காக அமெரிக்காவை ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதிலும், மோதல்கள் தொடர்வதால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், ஈரான் - அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் எச்சரிக்கையும் இந்தப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டையைப் போட்டுள்ளது.
“ஹார்முஸ் நீரிணையை மூடினால் உங்கள் நாடே இருக்காது; ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தைச் சீர்குலைக்கும் வேலையைச் செய்யக்கூடாது. கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்; தேவைப்பட்டால், ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா கைப்பற்றும்” என எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, லெபனானில் நிலைமைகள் மேம்பட்டு, உறுதியளிக்கப்பட்ட பொருளாதாரப் பலன்கள் கைகூடத் தொடங்கும் வரை, தனது அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல ஈரான் மறுத்துவிட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, தடைகளிலிருந்து விலக்கு அளிப்பது மற்றும் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை அமெரிக்கா மதிக்க வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், ஈரானிய அதிகாரிகள், தங்கள் அமெரிக்க சகாக்களுடன் புகைப்பட நிகழ்வில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதைத் திடீரென அவர்கள் ரத்து செய்துவிட்டு அந்த இடத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தது உலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தவிர, இரு தரப்பிலான பேச்சுவார்த்தையிலும் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.