elon musk - donald trump web
உலகம்

டெஸ்லாவை சீண்டினால் 20 வருடம் சிறை.. ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனம் சேதப்படுத்தப்படும் சம்பவம் பெரியளவில் பற்றி எரியும் நிலையில், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

PT WEB

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ், ஓரிகன், லல்வேண்ட், டைகார்ட் என நாடு முழுவதும் இடதுசாரி சார்பு நகரங்களில் டெஸ்லா கார்கள், கார் சேவை மையங்கள், சார்ஜிங் நிலையங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களும், தீ வைப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. சில இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

டெஸ்லா காரை புறக்கணிக்க வேண்டும், எலான் மஸ்க் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷங்களுடன் போராட்டங்களும் நடைபெறுகின்றன.

எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்..

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டெஸ்லா சொத்துக்கள் மீதான
சமீபத்திய தொடர் தாக்குதல்களின் பின்னணியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். டெஸ்லா கார்கள் மீதும் அந்நிறுவனத்தின் மீதும் தாக்குதல் நடத்துபவர்கள், அதற்கான நிதி அளிப்பவர்கள் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உள்ளிட்ட விளைவுகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்

மேலும், நாங்கள் உங்களை தேடுகிறோம் என்று, தனது சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் பதிவு ஒன்றில் அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் மீதான நாசவேலையைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையும் எலான் மஸ்க்கிற்கு வலுவான ஆதரவை தெரிவித்துள்ளது. தாக்குதல்களுக்கு யார் நிதியளிக்கக் கூடும் என்பது குறித்து விசாரணைகளை தொடருவதாக கூறியுள்ளது.

ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் சர்ச்சைக்குரிய அமைப்பான அரசு செயல்திறன் துறை தலைவர் பதவியை எலான் மஸ்க்கிற்கு வழங்கியதில் இருந்து இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அரசு துறைகளில் ஆட்குறைப்பு போன்ற எலான் மஸ்க்கின் யோசனையால் வேலை இழந்த பலர், டெஸ்லா நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்களில் குதித்துள்ளனர்.

எலான் மஸ்க்

மின்சார வாகனங்களை முன்னோடியாக கொண்டு இடதுசாரிகளிடமிருந்து ஆதரவை பெற்ற நிறுவனமான டெஸ்லா, தற்போது எதிர்ப்பையும் சந்தித்துள்ளது. ட்ரம்புடனான மஸ்க்கின் நெருக்கமான நட்பு அதிகரித்து வருவதும், ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதும், அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு கொடுத்த ஆதரவும் இடதுசாரிகளிடையே எதிர்ப்பு எழ முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. தாக்குதல்கள் குறித்து பேசிய டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், இடதுசாரி பில்லியனர்களால்
திட்டமிடப்பட்டு நிதியளிக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். வன்முறையை பயங்கரவாதம் என்று குறிப்பிட்டதோடு, பைத்தியகாரத்தனமானது என்றும், மிகவும் தவறானது என்றும் கண்டித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்திற்கு எதிரான போராட்டமும் அதற்கு எதிராக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பதும், சர்வதேச அளவில் சூடான விவாதங்களை கிளப்பியிருக்கிறது.