அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். பல்வேறு திட்டங்களை ரத்து செய்தும், புதிய பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். இது பல நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
இந்த நிலையில், ”உக்ரைன் விவாகரத்தில் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால், ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க வாய்ப்பிருப்பிருக்கிறது” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ”ரஷ்ய அதிபர் புதினை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயார். உக்ரைன் விவாகரத்தில் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால், ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க வாய்ப்பிருக்கிறது. புதினுடன் விரைவில் பேச உள்ளேன்.
புதினுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். அமைதியை விரும்புவதாக உக்ரைன் அதிபர் என்னிடம் கூறினார். இருதரப்பினரையும் எந்த நேரத்திலும் சந்திப்பேன். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதை தடுக்க விரைவில் முடிவு காண விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டார். மேலும் அவர், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, கூடுதலாக 10 சதவீத வரி விதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் மேலும் ஒரு பகுதியை கைப்பற்றி உள்ளதாக ரஷ்ய படைகள் அறிவித்துள்ளது.
114 ட்ரோன்களை சுட்டுவீழ்த்தி உள்ளதாகவும் ரஷ்ய படையினர்
தகவல் தெரிவித்துளனர்.
இதனை அடுத்து சமூக வலைத்தளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தனக்கு நல்ல நட்புறவு இருப்பதாகவும், அதே நேரத்தில், உக்ரைன் - ரஷ்யா இடையிலான மோசமான போருக்கு முடிவுகட்டவேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் பதிவிட்டுள்ளார்.
போரால் இனி உயிரிழப்புகள் ஏற்படுவதை தாம் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், உக்ரைன் உடனான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். போரை விரைந்து நிறுத்தாவிட்டால், ரஷ்யாவுக்கு அதிக வரி மற்றும் தடைகளை விதிப்பதை விட, தனக்கு வேறு எந்த வழியும் இல்லை என டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.