trump x page
உலகம்

’மொத்தமும் அழிக்கப்படும்’ - ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.. அமெரிக்கா கடைசி வார்னிங் ?

மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

PT WEB

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போர் ஒரு மாதங்களாக நடந்து வருகிறது. ஈரானின் உச்ச தலைவராக இருந்த அலி கமேனியை கொன்றுவிட்டதால் எளிதில் ஈரானை வீழ்த்தி விடலாம் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் நினைத்தன. ஆனால் ஈரான் இருநாடுகளுக்கும் பணியவில்லை. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது ஈரான்.

iran war

ஈரான் உடனான ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர, அங்குள்ள "புதிய மற்றும் மிகவும் நியாயமான" ஒரு தரப்புடன் அமெரிக்கா தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் வசமுள்ள ஹார்முஸ் நீரிணை உடனடியாக வணிகப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒருவேளை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இதுவரை அமெரிக்கா "தொடாமல்" வைத்திருக்கும் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், கார்க் தீவு மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் ஆகியவற்றை வெடிகுண்டு வைத்து முற்றிலும் நிர்மூலமாக்கப் போவதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

Ships stranded near Hormuz

கடந்த 47 ஆண்டுகளாக முந்தைய ஈரான் ஆட்சியால் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பழிவாங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நான்கு வாரங்களைக் கடந்து நீடித்து வருகிறது.

பாகிஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில், "புதிய அரசுடன்" பேசுவதாக ட்ரம்ப் கூறுவதை ஈரான் வெளியுறவு அமைச்சகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. மாறாக, அமெரிக்காவின் கோரிக்கைகள் "நியாயமற்றவை" என்று ஈரான் நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.