அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான இரண்டாவது சந்திப்பு புத்தாண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவை மிரட்டி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், திடீரென அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பை கைவிட முடிவு செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் இரு நாட்டுத் தலைவர்களுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கையை எடுப்பது குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.
சிங்கப்பூரில் நடந்த சந்திப்பை தொடர்ந்து, இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடிதம் எழுதினார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கன்சாஸில் வானொலிக்கு பேட்டியளித்த போது. புத்தாண்டில் ட்ரம்ப்-கிம் சந்திப்பு நிச்சயம் நிகழும் என நம்புவதாக கூறினார். வடகொரியாவில் ஏற்பட்டிருக்கும் அணு ஆயுத அச்சுறுத்தலும் புத்தாண்டில் நிச்சயம் நீங்கும் என்றும் பாம்பியோ நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் சிங்கப்பூரில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் தற்போது வடகொரியா எந்தவொரு அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளில் ஈடுபடவில்லை,இது இரு நாட்டுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு புதிய தெம்பை அளித்துள்ளது என்று கூறினார். இருப்பினும் தென் கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ள படைகளை வாபஸ் பெற்று தங்கள் நாட்டுக்கும் இருக்கும் அணு ஆயுத அச்சுறுத்தலை களைந்தால் மட்டுமே, அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவோம் என வடகொரியா தெரிவித்துள்ளது.