Trump paid tribute to US Soldiers web
உலகம்

ஈரான் போரில் 4 அமெரிக்க வீரர்கள் மரணம்.. ட்ரம்ப் கண்ணீர் அஞ்சலி!

வளைகுடா பதற்றத்தில் ஜோர்டான், ஈராக்கில் உயிரிழந்த 4 அமெரிக்க வீரர்களின் உடல்களுக்கு டெலாவேரில் டோவர் தளத்தில் ராணுவ மரியாதையுடன் ‘கௌரவ உடல் ஏற்பு’ நிகழ்வில் ட்ரம்ப் கண்ணீர் மல்க அஞ்சலி.

PT WEB

செய்தியாளர் - M. மீரா

வளைகுடாவில் அமெரிக்கா - ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் போர் தீவிரமடைந்த்துள்ளது. ஈரானின் பல பகுதிகளை குறிவைத்து அமெரிக்கா நடத்தி வரும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 17) அன்று ஜோர்டானில் உள்ள முவஃபாக் சால்டி விமானப்படைத் தளத்தில், மீது ஈரானிய ஏவுகணை தாக்கியதில், மூன்று வீரர்கள் கொல்லப்பட்டனர்.

US Soldiers

அவர்கள், முதல் லெப்டினன்ட் டைலர் ஜேம்ஸ் ஃபீஹான் (25); சார்ஜென்ட் ஏஞ்சல் எஸ். ராம்பேர்சாத் (28); மற்றும் பிரைவேட் இசபெல்லா கோன்சலஸ் (19) என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் மூவரும் அமெரிக்க ராணுவத்தின் வான் பாதுகாப்புப் படைப்பிரிவுகளில் பணியாற்றியவர்கள்.

நான்காவது படை வீரரான, சார்ஜென்ட் மைக்கேல் இம்மானுவேல் ஸ்விண்டன் (30), ஈராக்கின் எர்பில் நகரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19), உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நான்கு அமெரிக்க ராணுவ வீரர்களின் உடல்கள் தாய்நாடு திரும்பிய நிலையில், Delaware இல் உள்ள டோவர் விமானப்படை தளத்தில் (Dover Air Force Base) நடைபெற்ற ராணுவ மரியாதையுடன் கூடிய ‘கௌரவ உடல் ஏற்பு’ (Dignified Transfer) நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட பேழைகளில் வந்திறங்கிய வீரர்களின் உடல்களுக்கு ராணுவ ரீதியிலான மரியாதையை அவர் வழங்கினார்.

Trump paid tribute

உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரை அதிபர் டிரம்ப் தனியாகச் சந்தித்துத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், நாட்டின் அதிபராக இருந்து செய்ய வேண்டிய பணிகளிலேயே மிகவும் கடினமான மற்றும் நெஞ்சை உருக்கும் கடமை இதுதான். தாய்நாட்டிற்காகத் தங்களது உயிரைத் தியாகம் செய்த இந்த மகத்தான மாவீரர்களைக் கௌரவிப்பது நமது கடமை. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரிடம் ‘நாங்கள் உங்களை நேசிக்கிறோம், உங்கள் பிள்ளைகளை நேசிக்கிறோம்’ என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை என பேசியுள்ளார்.