அமெரிக்கா அதிபர் ட்ரம்பின் நாடாளுமன்ற உரையில் பங்கேற்க அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நாடியா முராட் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க பாரம்பரியப்படி, ஆண்டு தொடக்கத்தில் அதிபர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் உரையாடுவார். அந்த வகையில் நாளைய தினம் அதிபர் ட்ரம்ப் நாடாளுமன்ற உரையை நிகழ்த்த இருக்கிறார். இதில் பங்கேற்க ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களை அழைக்கலாம். அதன்படி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நாடியா முராட் மற்றும் வெனிசுலாவின் அதிபராக தன்னை அறிவித்து கொண்ட ஜூவான் கையிடோவின் பிரதிநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ட்ரம்ப் என்ற பெயர் கொண்டு கிண்டலுக்கு ஆளான சிறுவனையும் தன்னுடைய நாடாளுமன்ற உரையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்படி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ஜோஸ்வா ட்ரம்ப் என்ற பள்ளி மாணவர் ட்ரம்ப் என அவரது பெயர் முடிவடைவதால் பள்ளியில் பலர் அவரை கேலி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனநாயக கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், அகதிகளை அழைத்து வருவோம் எனக் கூறியுள்ள நிலையில், குடியரசு கட்சியினர் எல்லை பாதுகாப்பு படையினரை அழைத்து வருவோம் எனவும் அறிவித்துள்ளனர்.