அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் முடிவில் உறுதியாக உள்ள அதிபர் ட்ரம்ப்,அதற்காக அவசர நிலையை பிரகடனம் செய்வேன் என எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா - மெக்சிகோ இடையேயான எல்லை 3 ஆயிரத்து 145 கிலோமீட்டர் நீளம் கொண்டது. எல்லையில் ஏற்கனவே தடுப்புகள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. எனினும் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்புகளை தாண்டி அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக நுழைவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் முறைகேடாக மெக்சிகோ எல்லை வழியே அகதிகள் என்ற பெயரில் சமூக விரோதிகள் நாட்டினுள் நுழைவதை தடுக்க எல்லையில் சுவர் எழுப்பப்படும் என ட்ரம்ப் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். பதவியேற்றது முதலே அகதிகள் நாட்டினுள் நுழைவதையும் குடியேற்றம் பெறுவதற்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வரும் அதிபர், எல்லையில் சுவர் கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
சுவர் எழுப்பும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கும் வரை தீர்வு கிடைக்காது என ட்ரம்ப் தொடக்கம் முதலே கூறி வரும் நிலையில், பிரச்னையை மேலும் வலுவாக்கும் வகையில் ஆண்டின் இறுதியில் பிரதிநிதிகள் அவை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரின் கட்டுக்குள் வந்தது. புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்ற உடன் சுவர் எழுப்பும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், அரசு செலவினங்களுக்கு நிதி ஒதுக்கும் மசோதாவை பிரதிநிதிகள் அவை நிறைவேற்றியது. இதற்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் தன்னுடைய திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் செலவினங்கள் மசோதாவை ஏற்க மாட்டேன் என ட்ரம்ப் கூறி வருகிறார். இதனால் அமெரிக்காவில் 20 நாட்களுக்கு மேலாக அரசு பணிகள் முடங்கியுள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜனநாயக கட்சித் தலைவர்களுடனான கூட்டம் நடைபெற்றது. அதில் சுமூக முடிவு எட்டப்படாததால், ட்ரம்ப் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு பாதியிலேயே வெளியேறினார். எல்லை வழியே சமூகவிரோதிகள் நாட்டினுள் நுழைவதோடு போதை பொருட்களும் வருவதாக கூறும் ட்ரம்ப், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே வலுவான சுவர் எழுப்ப வேண்டும் என தன்னுடைய கோரிக்கையை நியாயப்படுத்தி வருகிறார். இதற்காக அமெரிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என ட்ரம்ப் கூறுகிறார்.
ஆனால் பிரதிநிதிகள் அவையோ எல்லை பாதுகாப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கிறோம் ஆனால் ட்ரம்ப் கேட்குமளவு நிதி ஒதுக்கினால் மற்ற துறைகளின் பணிகள் முடங்கும் எனக் கூறுகிறது. இரு தரப்பில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்கவில்லை எனில் இந்தப் பிரச்னைக்கு கூடிய விரைவில் தீர்வு கிடைக்காது.
இதனிடையே சுவர் கட்டும் திட்டத்தை நிறைவேற்ற தேசிய நெருக்கடி நிலையை பிரகடனம் செய்வேன் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டால் நாடாளுமன்ற ஒப்புதலின்றி அதிபர் தன்னிச்சையாகவே முடிவெடுக்க முடியும். இதற்கு முன்னர் அதிபராக பதவி வகித்த போது ஒபாமா பலமுறை அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். மேலும் ட்ரம்ப் பதவிக்கு வந்ததில் இருந்து 3 முறை அவசர நிலையை அறிவித்துள்ளார். சுவர் எழுப்பும் விவகாரத்தில் உடன்பாடு கிடைத்தால் மட்டுமே அமெரிக்க அரசு பணிகள் முடக்கத்திற்கு தீர்வு கிடைக்கும். நாளை வரை இது நீடித்தால் அமெரிக்க வரலாற்றிலேயே 22 நாட்கள் அரசு பணிகள் முடங்கியது ட்ரம்பின் ஆட்சியில்தான் என்ற பெயர் வரும். ஒபாமாவின் ஆட்சியின் போது 2013ஆம் ஆண்டு அரசு பணிகள் 16 நாட்கள் முடங்கி இருந்தது குறிப்பிடத்தகது.