அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில், தேசிய நெருக்கடி நிலையை அதிபர் டொனால்டு ட்ரம்ப் பிரகடனம் செய்துள்ளார்.
அமெரிக்கா - மெக்சிகோ இடையேயான எல்லை 3 ஆயிரத்து 145 கிலோமீட்டர் நீளம் கொண்டது. எல்லையில் ஏற்கனவே தடுப்புகள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. எனினும் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்புகளை தாண்டி அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக நுழைவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
முறைகேடாக மெக்சிகோ எல்லை வழியே அகதிகள் என்ற பெயரில் சமூக விரோதிகள் நாட்டினுள் நுழைவதை தடுக்க எல்லையில் சுவர் எழுப்பப்படும் என ட்ரம்ப் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். பதவியேற்றது முதலே அகதிகள் நாட்டினுள் நுழைவதையும் குடியேற்றம் பெறுவதற்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வரும் அதிபர், எல்லையில் சுவர் கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். ஆனால், சுவர் எழுப்ப நிதி ஒதுக்கும் விவகாரத்தில் ஜனநாயகக் கட்சியுடன் அவரால் சுமூகமான உடன்பாட்டிற்கு வரமுடியவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவில் தேசிய அவசரநிலையை அதிபர் டொனால்டு ட்ரம்ப் பிரகடனம் செய்துள்ளார். தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டால்தான் நாடாளுமன்ற ஒப்புதலின்றி அதிபர் தன்னிச்சையாகவே முடிவெடுக்க முடியும். மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப தேவையான நிதியை தற்போது ட்ரம்பால் ஒதுக்க முடியும்.
இதற்கு முன்னர் அதிபராக பதவி வகித்த போது ஒபாமா பலமுறை அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். மேலும் ட்ரம்ப் பதவிக்கு வந்ததில் இருந்து 3 முறை அவசர நிலையை அறிவித்துள்ளார்.