துருக்கி நேட்டோ உச்சி மாநாட்டுக்குப் பிறகு அங்காரா விமான நிலையத்தில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறியதாக உலகுக்கு காட்டப்பட்ட ட்ரம்ப், உண்மையில் கேட்டரிங் லாரி மூலம் ரகசியமாக வெளியேறி சிறிய ராணுவ விமானத்தில் புறப்பட்ட சம்பவம் பல வாரங்கள் மறைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் அதே விமானத்தில் இருந்த அதிகாரிகள், பாதுகாப்பு பணியாளர்கள், செய்தியாளர்கள் ஆபத்தில் விடப்பட்டதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
கடந்த மாதம் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மாநாட்டை முடித்துவிட்டு துருக்கி தலைநகர் அங்காராவின் விமான நிலையத்தில், செய்தியாளர்களின் கேமராக்கள் மற்றும் பொதுமக்களின் பார்வையில் படும் வகையில், வழக்கமான 'ஏர் போர்ஸ் ஒன்’ விமானத்தில் புறப்பட்டு நாடு திரும்பினார். இதுவழக்கமான ஒரு பயணமாகவே பார்க்கப்பட்ட நிலையில், இந்த பயணத்தின் போது நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் அம்பலப்படுத்தியது. இந்தப் பத்திரிகையின் செய்தி வெளிவரும் வரை, இந்த நடவடிக்கை பல வாரங்களாக வெள்ளை மாளிகையால் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
வெளியான தகவலின் படி, அங்காராவில் ஊடகக் கேமராக்களுக்கு முன்னிலையில் பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் ஏறினார். ஆனால் அந்த விமானத்தில் ஏறிய உடன் அங்கிருந்த ஒரு விமான நிலைய உணவு வழங்கும் லாரி மூலமாக ரகசியமாக வெளியேற்றப்பட்ட ட்ரம்ப், 'ஏர் போர்ஸ் சி-32ஏ’ என்ற சிறிய ராணுவ விமானத்தில் ரகசியமாக சென்றது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முதலில் அமெரிக்கா தரப்பில் மழுப்பலான பதிலே அளிக்கப்பட்ட நிலையில், தற்போது ட்ரம்ப் லாரியில் பதுங்கி வந்ததையும், ஏன் அவ்வாறு நடந்தது என்பது குறித்தும் பேசியுள்ளார்.
ஓஹியோவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்த விஷயத்தில் தனக்கு வேறு வழியில்லை என்றும், "நான் இரகசிய சேவை மற்றும் இராணுவத்தின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டவன். அவர்கள் என்னை வேறு விமானத்தில் செல்லச் சொன்னார்கள்... அவர்கள் சொல்வதை நான் செய்வேன்... அங்கே ஏதோ அச்சுறுத்தல் இருந்ததாக நினைக்கிறேன். நான் அதைப் பற்றி பெரிதாக எதுவும் கேட்கவில்லை. எனக்கு நிறைய அச்சுறுத்தல்கள் வரும்.
உண்மையில் நான் பயணம் செய்த விமானத்திற்குத்தான் அதிக ஆபத்து இருந்தது. ஏனென்றால், அவர்கள் குறிவைக்க அதிக வாய்ப்புள்ள விமானம் அதுவாகத்தான் இருக்கும் என நான் கருதுகிறேன்
உங்களுக்குத் தெரியாத பல அச்சுறுத்தல்கள் எனக்கு உள்ளன. எந்தவொரு செல்வாக்கு மிக்க ஜனாதிபதிக்கும் பல அச்சுறுத்தல்கள் இருக்கும் தானே. முக்கியத்துவம் குறைந்த ஜனாதிபதிகள் அச்சுறுத்தப்படுவதில்லை, ஒருவேளை நானே மிகவும் செல்வாக்கு மிக்க ஜனாதிபதி என்று நினைக்கிறேன்.
உண்மையைச் சொல்லப்போனால், நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அது எதுவாக இருந்தாலும் சரி, என் மனப்பான்மை உங்களுக்குத் தெரியுமல்லவா? எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்” என பேசியுள்ளார்.
அதிபர்கள் அடிக்கடி இரகசியப் பயணங்களை மேற்கொள்வார்கள் என்றாலும், இதுபோன்ற ஒருபயணம் அரிதாகவே பார்க்கப்படுகிறது. தலைமைத் தளபதிகள் சில சமயங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாட்டுப் பயணங்களை இரகசியமாக வைத்திருப்பதுண்டு. பயண அட்டவணைகள் மற்றும் பயண ஏற்பாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காகப் பயணம் முடியும் வரை இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். ஆனால், டிரம்ப் பயணத்தின் போதும், அதன்பிறகு பல வாரங்களுக்கும் அவர் இருந்த இடம் மறைக்கப்பட்டிருந்தது முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் விமானத்தில் தன்னால் விட்டுச்செல்லப்பட்ட வெள்ளை மாளிகை அதிகாரிகள், பாதுகாப்பு மற்றும் துணைப் பணியாளர்கள், செய்தியாளர்கள் ஆகியோருக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை ட்ரம்ப் குறைத்து மதிப்பிட்டு பேசியதாக விமர்சிக்கப்படுகிறது.