செய்தியாளர்; M. மீரா
ஆண்டுதோறும் ஸ்பெயினுக்கு 80 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள் என்று கூறப்படுகிறது .இதனால் அங்குள்ள வீடுகளின் வாடகை மற்றும் அத்தியாவசிய பெருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சுற்றுலாவுக்கு வரும் சொகுசுக் கப்பல்களின் (Cruise Ships) வரவால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு, கடுமையான தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. ‘ஏர்பிஎன்பி’ (Airbnb) போன்ற ஆன்லைன் தங்குமிடச் சேவைகளின் ஆதிக்கத்தால், தங்களின் சொந்த ஊரிலேயே சாதாரண நடுத்தர மக்களும், வேலை தேடி வரும் தொழிலாளர்களும் தங்குவதற்கு வீடுகள் கிடைக்காமல் வீதிகளில் தங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் உள்ளூர்வாசிகள் சுற்றுலா எங்களை நசுக்குகிறது என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக் கொண்டு ஸ்பெயினின் விடுமுறைத் தீவான மெனோர்காவின் வீதிகளில் ஊர்வலமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கருப்பு நிற உடைகளை அணிந்து தங்களை ‘எறும்புகள்’ போல வேடமிட்டுக் கொண்டு வீதிகளில் இறங்கி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மேலும் போராட்டத்தின் போது சுற்றுலா எங்களை நசுக்குவது போதும், எங்கள் சொந்த வீடுகளை விட்டு எங்களை வெளியேற்றாதே, சுற்றுலாவால் நாங்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம் என்று ஆவேசமாக முழக்கமிட்டனர்.
‘ஜிஓபி மெனோர்கா’ (GOB Menorca) என்ற சுற்றுச்சூழல் மற்றும் குடிமக்கள் கூட்டமைப்பு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியது.
இந்த ‘எறும்புப் போராட்டம்’ ஒரு ஆரம்பம் மட்டுமே என்றும், தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் வரும் ஜூலை 26 அன்று பக்கத்தில் இருக்கும் தீவான மல்லோர்காவின் (Mallorca) தலைநகரான பால்மாவில் ஒட்டுமொத்த சுற்றுலாத் தலங்களையுமே ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் ஒரு மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று குறைவான சுற்றுலா, நிறைவான வாழ்க்கை (Less Tourism, More Life) என்ற சமூக அமைப்பு எச்சரித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்காகத் தீவை விளம்பரப்படுத்த அரசாங்கம் ஒரு நாளைக்கு £17,000 (20,000 யூரோ) க்கும் அதிகமாகச் செலவிடுவதாகவும், ஆனால் குடியிருப்பாளர்களின் வாழ்க்கை நிலைமைகளுக்குப் போதுமான அளவு செலவிடவில்லை என்றும் இந்த அமைப்பு கூறுகிறது . தங்களின் வாழ்வாதாரத்தையும் கலாச்சாரத்தையும் அழிக்கும் ஸ்பெயின் அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக இந்த போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.