உலகம்

"எக்ஸ்ட்ரா சாஸுக்கு பில் போடுவியா?" ஓட்டலை அடித்து நொறுக்கிய பெண்கள்!

ஜா. ஜாக்சன் சிங்

அமெரிக்காவில் எக்ஸ்ட்ரா சாஸுக்கு (கெச் அப்) பில் போட்டதால் ஆத்திரமடைந்த மூன்று பெண்கள் ரெஸ்டாரண்ட்டை அடித்து நொறுக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 'பெல் ஃப்ரைஸ்' என்ற ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த ரெஸ்டாரண்டுக்கு நேற்று மூன்று பெண்கள் சாப்பிட வந்துள்ளனர். பீட்சா, பர்கர், சிக்கன் நூடுல்ஸ் உள்ளிட்டவற்றை அவர்கள் ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட சாஸ் தீர்ந்து போனதால் மேற்கொண்டு பல முறை அவர்கள் சாஸை ஆர்டர் செய்தனர்.

அனைத்தையும் சாப்பிட்டு முடித்த பின்னர், அவர்களுக்கு பில் வழங்கப்பட்டது. அதில், எக்ட்ரா சாஸுக்காக 1.75 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.138) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்து ஆத்திரமடைந்த அந்த மூன்று பெண்களும், ரெகுலர் கஸ்டமரான எங்களிடமே எக்ஸ்ட்ரா சாஸுக்கு பில் போடுகிறாயா எனக் கேட்டு, ரெஸ்டாரண்ட்டை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த நாற்காலி, மேஜை, தட்டு உள்ளிட்ட பொருட்களை எடுத்து ரெஸ்டாரண்டின் காசாளர் அறை மீது வீசியெறிந்தனர். இதில் அங்கிருந்த கணிணிகள், இயந்திரங்கள் நொறுங்கின. இரண்டு ஓட்டல் ஊழியர்களின் மண்டையும் உடைந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் அங்கு வந்து தகராறில் ஈடுபட்ட 3 பெண்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.