உலகம்

ஐந்து ஆண்டுகளில் அடுத்தடுத்து மூன்று மகன்கள் உயிரிழப்பு: மீளாத் துயரத்தில் பெற்றோர்!

sharpana

இங்கிலாந்தின் ஹல் நகரைச் சேர்ந்த ஆர்தர் - கிறிஸ்டின் மோஸ்லி தம்பதியினரின்  மூன்று மகன்களும் ஐந்து ஆண்டுகளில் அடுத்தடுத்து உயிரிழந்ததால் மீளாத்துயரத்தில் ஆழ்ந்துள்ளது அக்குடும்பம்.

 67 வயதாகும் ஆர்தர்-மோஸ்லி தம்பதிகளுக்கு மூன்று மகன்கள். இதில், 40 வயதாகும் மூத்த மகன் ராபர்ட் கடந்த 2015 ஆம் ஆண்டு படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்தார். அந்த சோகத்திலிருந்து மீண்டு வருவதற்குள்ளேயே கடந்த ஆண்டு, இவர்களின் 37 வயதாகும் இரண்டாவது மகன் பீட்டர் படகில் இருந்து கடலில் விழுந்து உயிரிழந்தார். இந்த ஆண்டு ,பீட்டரின் நினைவு நாளை அனுசரிப்பதற்குள்ளேயே, இவர்களின் மூன்றாவது மகனான 36 வயதாகும் பிலிப் பைக்கில் சென்றுகொண்டிருக்கும்போது விபத்தில் உயிரிழந்தார்.

அன்பு மகன்கள் அடுத்தடுத்ததாக உயிரிழந்ததால், மீளாத்துயரத்தில் வீழ்ந்துவிட்டது மோஸ்லி குடும்பம். ”மூன்று மகன்களையும் பறிகொடுத்துவிட்டு எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று எல்லோரும் கேட்கிறார்கள். வெளியில்தான் எங்கள் சோகத்தை மறந்து தைரியமுடன் இருக்கிறோம். ஆனால், வீட்டில் இருக்கும்போது மகன்களை நினைத்து நினைத்து துடித்துக்கொண்டிருக்கிறோம்” என்கிறார் மோஸ்லி.

தங்கள் முதல் மகன் ராபர்ட்டின் மரணத்தில் மட்டும் சந்தேகம் கொண்டிருக்கிறார்கள், இந்தத் தம்பதியினர். நண்பரின் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றவர் படிக்கட்டுகளின் கீழே இறந்துக் கிடந்ததால், தவறி விழுந்தாரா? கொலை செய்யப்பட்டாரா? என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறார்கள் அவர்கள்.