உலகம்

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு! முழு விபரம்!

PT

2022 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், வேதியியல், இலக்கியம், உலக அமைதி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசு ஆண்டு தோறும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு வழங்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. அழிந்துபோன ஹோமினின்களின் (மனிதனின் மூதாதையர்களான நியாண்டர்தால்கள் போன்ற உயிரினங்கள்) மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியலுக்கான நோபல் பரிசு யாருக்கு என்பதை தேர்வுக்குழு இன்று அறிவித்துள்ளது. இந்தாண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று அறிஞர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஷிலிங்கருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கலான ஃபோட்டான் சோதனை, பெல் ஏற்றத்தாழ்வுகளை மீறுதல், குவாண்டம் தகவல் அறிவியல் ஆகிய ஆய்வுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.