உலகம்

பூமியிலேயே நீண்ட நடக்கக்கூடிய பாதை இதுதானாம்! ஆனால் ஒருவர்கூட கடந்ததில்லை!

Sinekadhara

புதிய இடங்கள் மற்றும் வாழ்விடங்களைக் கண்டறிய மனிதர்களுக்கு உதவிய பழமையான பழக்கங்களில் ஒன்று நடப்பது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இந்த பயணங்கள் தொடர்ந்தாலும், இன்னும் கண்டறியப்படாத இடங்கள் பல பூமியில் இருக்கின்றன. தொலைதூர தரிசு நிலங்களிலும், உயர்ந்த மலைகளிலும்கூட மனிதர்கள் தங்கள் கால்தடத்தை பதித்துவிட்டனர். ஆனால் ஒரே ஒரு பயணம் இதுவரை எவராலும் முடிக்க முடியாததாய் இருக்கிறதாம்.

அதுதான் பூமியிலேயே நீண்ட நெடிய தொலைவான பயணமாகவும் இருக்கும். அது தென்னாப்ரிக்காவின் கேப் டவுனில் தொடங்கி கிழக்கு ரஷ்யாவின் மகதான் டவுனில் முடிவடைகிறது. உலகிலேயே நீண்ட பயணப்பாதையான இதனை ஒருவர்கூட இதுவரை நடந்து முடித்ததில்லையாம்.

நடக்கக்கூடியது என சொல்லப்பட்டாலும், இதன் மொத்த தொலைவு 22,387 கி.மீ. இந்த வழியில் பயணம்செய்ய பயணிகள், விமானங்கள், படகுகள் மற்றும் கார்கள் என எதையும் நாடவேண்டியதில்லையாம். ரஷ்யா டூ தென்னாப்ரிக்கா வரையிலான இந்த பாதையில் மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் வழியாக பயணிகள் 17 நாடுகள் மற்றும் 6 காலங்களை கடந்துசெல்ல நேரிடும். எந்த இடைவெளியும் இல்லாமல் ஒரு நபர் தொடர்ந்து நடந்தால் 182 நாட்களில் இந்த பயணத்தை முடித்துவிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் இது சாத்தியமல்ல.

ஒரு மனிதன் ஒருநாளில் 8 மணிநேரம் நடந்தால், 562 நாட்களில் பயணத்தை முடிக்கலாம். இந்த நீண்ட பாதையின் தொலைவானது 13 முறை எவரஸ்ட் சிகரத்தில் ஏறி இறங்குவதற்கு சமம் என்கின்றனர் நிபுணர்கள். இந்த பயணத்தை முடிக்க பலர் எண்ணினாலும், நிபுணர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏனெனில் இது பயணிகளை தெற்கு சூடான் போன்ற மோசமான மற்றும் ஆபத்தான பாதைகளின் ஊடே நடத்திச்செல்லும்.

ஆனால் சமீபத்தில் 33 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரைப் பறித்த துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது இந்த பாதையை பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பாதையானது ரெடிட்டில் பகிரப்பட்ட பின்பு பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.