உலகம்

கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு திரும்பிய பெண்ணுக்கு பாதுகாவலர்களால் நேர்ந்த கொடூரம்

webteam

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியை பார்த்து விட்டு, வீடு திரும்பிய இளம்பெண்ணை மைதானத்தின் பாதுகாவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெறுவது போன்று பாகிஸ்தான் நாட்டிலும் “பாகிஸ்தான் சூப்பர் லீக்” என்ற பெயரில் பி.எஸ்.எல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது பி.எஸ்.எல். தொடரின் 7வது சீசன் நடைபெற்று வருகிறது. போட்டியை நேரில் காண வேண்டும் என்பதற்காக லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். போட்டியை பார்த்து விட்டு அவர் வீடு திரும்ப திட்டமிட்ட அந்த பெண்ணுக்கு வழி தெரியவில்லை. மேலும் அவர் தனது குடும்பத்தினரை விட்டு விலகி வேறு இடத்திற்கு சென்று விட்டார். வீட்டுக்கு செல்லும் வழியும் அவருக்கு தெரியவில்லை.

இதனால், அந்த பகுதியில் இருந்த இரண்டு தனியார் பாதுகாவலர்களை அணுகி உதவி கேட்டுள்ளார். அவர்கள் வழி காட்டுகிறோம் என கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்று, அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். இதனால் அந்த இளம்பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார். சத்தம் கேட்டு அவரது சகோதரரும், தந்தையும் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து தனியார் பாதுகாவலர்கள் இருவரும் அந்த பகுதியில் இருந்து தப்பி ஓடி விட்டனர். தற்போது வழக்குப்பதிவு செய்துள்ள பாகிஸ்தான் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.