US doubt on its own military Reuters
உலகம்

ராணுவத்தை சந்தேகிக்கும் அமெரிக்க அரசு : உயர் அதிகாரிகளுக்கு 'பாலிகிராப்' சோதனை!

தனது சொந்த ராணுவத்தை அமெரிக்க அரசு சந்தேகித்துள்ளது ராணுவத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

ஈரான் போரில் அமெரிக்கா தயாராக இல்லை என்ற விமர்சனங்கள் மத்தியில், பாட்ரியாட் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் வேகமாக குறைந்து வருவதாக வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்ட செய்தி, ராணுவத்தின் உள்கட்டமைப்பு ரகசியங்கள் கசியும் அபாயத்தை வெளிப்படுத்தியது. இதனால் பென்டகன் தலைமையகத்தில் மூத்த அதிகாரிகள், முக்கிய ஊழியர்கள் மீது பொய் கண்டறியும் பாலிகிராப் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி, தேசிய பாதுகாப்பு விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. போரின் முதல் வாரத்தில் இந்த கூட்டணிக்கு பெரிய அளவிலான வெற்றிகள் கிடைத்தன. முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய அரசியல், ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்டனர்.

ஆனால், இந்த பாதிப்பில் இருந்து ஈரான் விரைவில் மீண்டு அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை தாக்க தொடங்கியது. மேலும் உலக வர்த்தகத்தின் உயிர் நாடியான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. இதன் காரணமாக இந்த போர் விரைவில் முடிவடைந்துவிடும் என எதிர்பார்த்த அமெரிக்காவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த போருக்கு அமெரிக்கா தயாராகவில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், போரில் எதிரி நாட்டு ஏவுகணைகளைத் தடுத்து அழிக்கப் பயன்படும் பாட்ரியாட் ஏவுகணைகளும், நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளும் அமெரிக்காவிடம் வேகமாகத் தீர்ந்து வருவதாக முக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அதாவது வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் அமெரிக்காவின் கைவசம் இருக்கும் ஆயுதங்கள் குறித்த விவரங்களை துல்லியமாக வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராணுவத்தின் ரகசிய விவரங்களை ராணுவத்தின் மூத்த அதிகாரிகளே ஊடகங்களுக்கு கசியவிட்டு இருக்கலாம் என அமெரிக்க அரசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

Sean Parnell

இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க முப்படைகளின் தலைமை அலுவலகத்தில் வேலை செய்யும் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய ஊழியர்களிடம் 'பாலிகிராப்' சோதனை என அழைக்கப்படும் பொய் சொல்வதைக் கண்டுபிடிக்கும் கருவி மூலம் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ராணுவ அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ள தகவல் பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய பென்டகன் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் (Sean Parnell), ராணுவத்துக்குள் நடக்கும் விசாரணைகள் பற்றி வெளிப்படையாகப் பேச முடியாது என்றும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள் வெளியே போவதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். இதுகுறித்து தீவிரமாக விசாரிப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும், நாட்டின் பாதுகாப்புக்கும், உலக நாடுகளில் களத்தில் இருக்கும் நமது ராணுவ வீரர்களின் உயிருக்கும் இந்த ரகசியங்களைப் பாதுகாப்பது அவசியமானது என்றும் கூறியுள்ளார்.