அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதும் நேட்டோ அமைப்புக்கு அமெரிக்காவே அதிக பங்களிப்பு செய்து வருகிறது என்றும், நேட்டோ நாடுகள் தங்கள் பாதுகாப்புக்கு ஒதுக்கும் நிதியை அதிகரிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வந்தார். இதனால் பல்வேறு நாடுகளும் தங்கள் ராணுவத்துக்கான நிதியை அதிகரிப்பதாக அறிவித்தன. இதனிடையே நேட்டோ உறுப்பினர் நாடான டென்மார்க்குக்குச் சொந்தமான கிரீன்லாந்தை அமெரிக்காவோடு இணைக்கவுள்ளதாக ட்ரம்ப் பேசினார். இதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதனால் நேட்டோ நாடுகளுக்குள் பிரச்னை வெடித்தது.
தொடர்ந்து ஈரான் போரில் அமெரிக்கா களமிறங்கிய நிலையில், இந்தப் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் வரவேண்டும் என ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதனை நேட்டோ நாடுகள் ஏற்க மறுத்த நிலையில், ஸ்பெயின் உள்ளிட்ட சில நேட்டோ நாடுகள் தங்கள் ராணுவத் தளங்களில் அமெரிக்க விமானங்கள் தரையிறங்குவதற்குக்கூட அனுமதி மறுத்தன.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த ட்ரம்ப், நேட்டோ அமைப்பால் அமெரிக்காவுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா தனது ராணுவத்தை விலக்கவுள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில், முதற்கட்டமாக நேட்டோ உறுப்பினர் நாடான ஜெர்மனியில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க வீரர்களைத் திரும்பப்பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படைகளில் உள்ள பாதி வீரர்கள் அமெரிக்காவுக்குத் திரும்ப அழைக்கப்படவுள்ளதாகவும், மற்ற வீரர்கள் பிற அமெரிக்க தளங்களுக்கும் அனுப்பப்படுவர் என்றும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தங்கள் படைகளை அமெரிக்கா திரும்பப் பெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவு ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சத்தையும், ரஷ்யாவுக்கும் மகிழ்ச்சியையும் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.