US Conspiracy Behind the Ouster of Imran Khan Government web
உலகம்

இம்ரான் கான் அரசை நீக்கியதில் அமெரிக்காவின் சதித்திட்டம்.. அம்பலப்படுத்திய புலனாய்வு பத்திரிகை!

அமெரிக்கா தனது நட்புநாடான பாகிஸ்தானின் உள்விவகாரங்களில் தலையிட்டு, அந்நாட்டு பிரதமரை பதவியில் இருந்து நீக்கியதற்கான ஆவணங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை பதவியிலிருந்து அகற்ற அமெரிக்கா ரகசியமாக தலையிட்டதாக ‘டிராப் சைட்’ புலனாய்வு ஊடகம் வெளியிட்ட ஆவணங்கள் காட்டுகின்றன. பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் கான் மற்றும் அமெரிக்க அதிகாரி டொனால்ட் லு இடையேயான உரையாடலில், ரஷ்யா-உக்ரைன் போரில் நடுநிலை கொண்ட இம்ரானை நீக்காவிட்டால் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவோம் என அமெரிக்கா மிரட்டியதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் (Imran Khan), கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் தனது பதவியை இழந்தார். அப்போது அவர் பதவியிழந்ததற்கு அமெரிக்காவின் ரகசிய சதிதான் காரணம் என்று அவர் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த நிகழ்வுக்கு பின்னர் இம்ரான் கானின் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டதோடு, ஊழல் புகாரில் இம்ரான் கான் சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னணியில் அமெரிக்காவின் தலையீடு இருந்ததைக் காட்டும் ஆவணங்களை 'டிராப் சைட்' (Drop Site) என்ற அமெரிக்க புலனாய்வு ஊடகம் வெளியிட்டு அதிரவைத்துள்ளது.

அந்த ஆவணங்களில் அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் கானுக்கும், (Asad Majeed Khan) US அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி டொனால்ட் லு-விற்கும் (Donald Lu) இடையே நடைபெற்ற ரகசிய உரையாடல் பதிவாகியுள்ளது.

அதில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த போது, இம்ரான் கான் ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்டது மற்றும் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் நடுநிலை வகித்தது குறித்து அமெரிக்கா கடும் அதிருப்தியில் இருந்தது தெரியவந்துள்ளது.

அதோடு இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்று அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால் அமெரிக்கா பாகிஸ்தானின் செயல்களை மன்னிக்கும் என்றும், அப்படி நடைபெறாவிட்டால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவால் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் என்றும் டொனால்ட் லு மிரட்டல் விடுத்தது அதில் பதிவாகியுள்ளது.

பாகி., அமெரிக்கா

அதோடு இம்ரான் கான் நீக்கப்பட்டதற்குப் பிறகு பொறுப்பேற்ற புதிய பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவின் விருப்பத்திற்கேற்ப உக்ரைன் போருக்காக ஆயுதங்களை விநியோகம் செய்யத் தொடங்கியது என்றும், இதற்குப் பிரதிபலனாகவே சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதியுதவி பாகிஸ்தானுக்குக் கிடைத்ததாகவும் 'டிராப் சைட்' வெளியிட்ட அறிக்கை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக வெளிவந்துள்ள இந்த அறிக்கை பாகிஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.