Moon nasa
உலகம்

728 அடி அகலம்.. 141 அடி ஆழம்.. திடீரென உருவான பிரம்மாண்ட பள்ளம்.. நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மம்!

லவின் கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள இந்தப் பள்ளம், சுமார் 728 அடி அகலமும், 141 அடி ஆழமும் கொண்டதாக உள்ளது. அதாவது, சுமார் இரண்டு கால்பந்து மைதானங்களின் நீளத்திற்கு சமமான அகலத்தைக் கொண்டிருக்கிறது.

PT WEB

நிலவை நாம் வானத்தில் பார்க்கும்போது, அதன் மேற்பரப்பு முழுவதும் ஏராளமான பள்ளங்களுடன் இருப்பதாகச் சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால், அந்த நிலவில் 141 அடி ஆழத்திற்கு பள்ளம் ஒன்று இருப்பதாகச் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படியொரு புதிய பள்ளத்தைத்தான் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA-வின் Lunar Reconnaissance Orbiter எனப்படும் LRO கண்டுபிடித்துள்ளது. பல ஆண்டுகளாக நிலவைச் சுற்றி வந்து அதன் மேற்பரப்பை மிகத் துல்லியமாகப் படம் பிடித்து வரும் இந்த விண்கலம், பழைய மற்றும் புதிய புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, நிலவின் மேற்பரப்பில் புதிதாக உருவான மிகப்பெரிய பள்ளம் ஒன்றைக் கண்டறிந்துள்ளது. NASA விஞ்ஞானிகள் இதற்கு McGetchin crater எனப் பெயரிட்டுள்ளனர். நிலவின் கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள இந்தப் பள்ளம், சுமார் 728 அடி அகலமும், 141 அடி ஆழமும் கொண்டதாக உள்ளது. அதாவது, சுமார் இரண்டு கால்பந்து மைதானங்களின் நீளத்திற்குச் சமமான அகலத்தைக் கொண்டிருக்கிறது.

ஆனால், இவ்வளவு பெரிய பள்ளம் எப்படி உருவானது? NASA விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி, ஒரு சிறுகோள் அல்லது வால்நட்சத்திரத்தின் ஒரு பகுதி நிலவின் மேற்பரப்பில் மோதியதால்தான் இந்தப் பள்ளம் உருவாகியிருக்கலாம் என்றும், அந்த விண்கல் சுமார் 3 முதல் 6 மாடிக் கட்டடத்தின் அளவுக்கு இருந்திருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த மோதல் 2024-ம் ஆண்டு ஏப்ரல் 11 முதல் மே 22-ம் தேதிக்குள் ஏதோ ஒரு நாளில் நிகழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்தப் பள்ளத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 4 மைல், அதாவது 6.4 கி.மீ. அகலத்திற்கு நிலவின் மேற்பரப்பு மாறியிருப்பதை NASA-வின் Diviner என்ற கருவியின் தரவுகள் காட்டுகின்றன. இந்தப் பகுதி சுற்றியுள்ள நிலப்பரப்பைவிட இரவு நேரத்தில் சுமார் 16 டிகிரி Fahrenheit அளவுக்கு குளிர்ச்சியாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், விண்கல் மோதியபோது நிலவின் மேற்பரப்பில் இருக்கும் மண் மற்றும் பாறைத்துகள்கள் எனப்படும் regolith தளர்ந்து, அதிகமாகக் கிளறப்பட்டிருக்கிறது.

இதனால் அந்தப் பகுதி வெப்பத்தை வழக்கம்போல் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்படி பல கோடி ஆண்டுகளாக இருந்த பள்ளங்களுக்கு மத்தியில், சமீப காலத்தில் உருவான ஒரு புதிய பள்ளத்தை NASA கண்டுபிடித்திருப்பது, நிலவு இன்னும் முழுமையாக அமைதியான உலகம் இல்லை என்பதையே காட்டுகிறது. நாம் பூமியில் இருந்து அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் நிலவின் மேற்பரப்பில், விண்கற்களின் தாக்கத்தால் இன்றும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன!