உலகம்

கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றவர் இலங்கையில் எம்.பி.யாக பதவியேற்பு

EllusamyKarthik

இலங்கையின் ரத்னபுரா மாவட்டத்தை சேர்ந்த எம்.பி பிரேமலால் ஜெயசேகரா அண்மையில் கொலை வழக்கு ஒன்றில் மரண தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இலங்கை பொதுஜன பேராமுலா கட்சியின் மக்களவை உறுப்பினரான அவர், கடந்த 2015 தேர்தல் பரப்புரையில்போது எதிர்க்கட்சி தொண்டர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக கடந்த ஜூலை 31 அன்று மரண தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். 

தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தண்டனை பெறுவதற்கு முன்னரே அவர் தாக்கல் செய்திருந்ததால் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் அனுமதித்தது. அதையடுத்து அவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 

இருப்பினும் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதியேற்றுக்கொள்ள சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர்.

அதனை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினார் பிரேமலால் ஜெயசேகரா. ஒரு எம்.பியாக அவரது கடமையை செய்ய நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. அதோடு சிறைச்சாலையிலிருந்து பாராளுமன்றம் வரை அவர் பாதுகாப்புடன் செல்ல போலீஸ் பாதுகாப்பிற்கும் நீதிமன்றம் உத்தவிட்டது. 

நீதிமன்றம் சொன்னபடி சிறைச்சாலையிலிருந்து பாராளுமன்றம் வந்த அவர் எம்.பியாக பிரமாணம் செய்து கொண்டார். 

அதனை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்பு நிற துண்டை தோளில் போட்டுகொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். பதவி ஏற்றுக்கொண்ட பிரேமலால் ஜெயசேகரா அவை நடவடிக்கைகள் முடிந்ததும் மீண்டும் சிறைக்கே சென்றார்.