உலகம்

அண்டார்டிகா: கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை; பல நகரங்கள் மூழ்கும் அபாயம்!

JustinDurai

அண்டார்டிகாவில், மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து கடலில் மிதக்கத் தொடங்கியுள்ளது. புது டெல்லி நகரத்தைப் போன்று, 3 மடங்கு பெரிதான அந்த பனிப்பாறை உடைந்துள்ளது சூழல் ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூமியின் தென் பகுதியில் உள்ள மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் நிறைந்து காணப்படுகின்றன. புவி வெப்பமயமாதலை இந்த பனிப்பாறைகள் தடுத்து வருகின்றன. எனினும், மனிதனின் நவீன வாழ்வியல் முறைகளால், காலநிலையில் வெப்பம் அதிகரித்து இந்த பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகத் தொடங்கியுள்ளன. இதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்து பலகடற்கரையோர பகுதிகள் நீரினுள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அண்டார்டிகாவில் நான்காயிரத்து 320 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று, பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்கியுள்ளது. அதாவது புதுடெல்லி நகரைப் போன்று 3 மடங்கு பெரிதான பனிப்பாறை வெட்டெல் கடலில் மிதக்கிறது. ஏ-76 என பெயரிடப்பட்டுள்ள அந்த பாறை 170 கிலோ மீட்டர் நீளமும், 25 கிலோ மீட்டர் அகலமும் உடையதாக, அண்டார்டிகா கடலில் மிதப்பதால், சூழல் ஆர்வர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்