உலகம்

அமெரிக்காவில் கிளம்பிய பன்றிகாய்ச்சலுக்கு இழப்பீடு கேட்டோமா..? : சீனா பதிலடி

webteam

ஹெச்1என்1 எனப்படும் பன்றி காய்ச்சல் உலகம் முழுவதும் பரவியது அமெரிக்காவிலிருந்து தானே அதற்கு யாரேனும் இழப்பீடு கேட்டோமா என சீனா கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் உலகிலேயே அமெரிக்கா தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுப்பாகிய அமெரிக்கா சீனா மீது தனது குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது. கொரோனா வைரஸை சீனா தான் திட்டமிட்டு பரப்பியதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன் சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவியது தொடர்பாக விசாரிக்கப்படும் என்றும், சீனா உண்மையை மறைத்திருந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருந்தது. இதனால் சீனா மற்றும் அமெரிக்கா இடையே வார்த்தை போர் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.

அமெரிக்கா தொடர்பாக நேற்று பேசியுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கெங் ஷுவாங், “ஹெச்1என்1 காய்ச்சல் அல்லது பன்றிக்காய்ச்சல் முதன்முதலில் 2009ஆம் ஆண்டு அமெரிக்காவில் தான் கண்டயறிப்பட்டது. 214 நாடுகளுக்கு பரவிய அந்த நோய் சுமார் 2 லட்சம் உயிர்களை கொன்றது. இதற்காக அமெரிக்காவிடம் யாராவது இழப்பீடு கேட்டோமா ?

1980-களில் எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்டது அமெரிக்காவில் தான். இந்த நோய் உலகிற்கு பெரும் துயரமாக மாறியது. இதற்கு யாராவது அமெரிக்காவை பொறுப்பேற்குமாறு கூறினோமா ? 2008ஆம் ஆண்டு லேஹ்மன் சகோதரர்களிடையே ஏற்பட்ட குழப்பத்தால் உலகப் பொருளாதாரமே பாதிப்படைந்ததாக சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் கிஷோர் மஹ்புபானி குறிப்பிட்டிருந்தார், அதற்கு அமெரிக்காவிடம் யாராது இழப்பீடு கேட்டோமா ?” என கொந்தளித்துள்ளார்.