Tehran Times  tehran times
உலகம்

கொல்லப்பட்ட 165 குழந்தைகள்| 'அவர்களின் கண்களைப் பாருங்கள் டிரம்ப்..' - தலைப்பிட்ட தெஹ்ரான் டைம்ஸ்!

டிரம்ப், அவர்களின் கண்களைப் பாருங்கள் என்று தலைப்பிட்ட தெஹ்ரான் டைம்ஸின் முதல்பக்கத்தில் கொல்லப்பட்ட 165 குழந்தைகளின் முகம் அச்சிடப்பட்டிருக்கிறது.

PT WEB

ஈரானின் தெற்கு நகரமான மினாபில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் உருவப்படங்களும் அச்சிடப்பட்டு 'அவர்களின் கண்களைப் பாருங்கள்' டிரம்ப் என்று தெஹ்ரான் டைம்ஸின் முதல்பக்கத்தில் தலைப்பிடப்பட்டிருக்கிறது

ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா போருக்கு இடையே பிப்ரவரி 28ஆம் தேதி சனிக்கிழமை காலை, தெற்கு ஈரானில் உள்ள மினாப் நகரில் உள்ள "ஷாஜாரே தய்யீபே" பள்ளியில் பள்ளிக்குழந்தைகள் கூடியிருந்தனர். அப்போது இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது ஆரம்ப தாக்குதல்களைத் தொடங்கியிருந்தனர். இஸ்ரேல்-அமெரிக்கா சேர்ந்து தாக்கிய ஏவுகணைகள் பள்ளியைத் தாக்கி, கட்டிடத்தை அழித்தன. அப்போது பள்ளியின் கூரை குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது இடிந்து விழுந்ததில் மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்பட்டது.

இந்த படுகொலைத் தாக்குதலில் 165 குழந்தைகள் இறந்தனர் என்றும் , அவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 12 வயதுக்குட்பட்ட பெண்கள் என்றும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் குறைந்தது 95 பேர் காயமடைந்தனர்.

Mass graves of school girls , iran

இந்தசூழலில் குழந்தைகள் படுகொலையின் படங்கள் சமூக ஊடக தளங்களில் பரவியது, இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ பொறுப்பேற்கவில்லை.

165 சிறுமிகள் பலியானதில் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை - டிரம்ப்

இந்தத் தாக்குதல் நடைபெற்ற ஒரு வாரத்துக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இது குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்து டிரம்ப், அந்தத் தாக்குதல் ஈரானால் நடத்தப்பட்டது. ஏனெனில், ஈரான் துல்லியமாக இலக்குகளைக் குறிவைத்து தாக்குபவர்கள் அல்ல. ஆகவே, ஈரானே அந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறது என்றும், 165 சிறுமிகள் பலியான சம்பவத்துக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை என்றும் கூறினார் .

அமெரிக்க இராணுவமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று நியூயார்க் டைம்ஸ் நடத்திய விசாரணையில் சொல்லப்பட்டதை அடுத்து டிரம்ப் இதைக் கூறியிருந்தார்.

அமெரிக்க ரானுவ தளங்களை குறிவைத்து தாக்கும் ஈரான்

இந்நிலையில் ஈரானின் அரசு ஆதரவு பெற்ற ஆங்கில மொழி செய்தித்தாளான டெஹ்ரான் டைம்ஸின் முதல் பக்கத்தில், மினாபில் இருக்கும் தொடக்கப்பள்ளியில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் உருவப்படங்களும் அச்சிடப்பட்டிருக்கிறது . மேலும் அவர்களின் கண்களைப் பாருங்கள்' டிரம்ப் என்றும் தலைப்பிடப்பட்டிருக்கிறது

தாக்கியது அமெரிக்க ஏவுகணைதான்..

இந்த தாக்குதல் குறித்து டச்சு உண்மைச் சரிபார்ப்பு அமைப்பான பெல்லிங்கேட்டை (Bellingcat) சேர்ந்த மோதல் ஆராய்ச்சியாளர் ட்ரெவர் பால் தனது X பக்கத்தில், சில வீடியோ காட்சிகளை பகிர்ந்து பள்ளிமீது தாக்கியது அமெரிக்காவின் டோமாஹாக் குரூஸ் ஏவுகணை என்று பதிவிட்டார். மினாபில் இருக்கும் புரட்சிகர காவல்படையின் வளாகத்தை அமெரிக்காவின் ஏவுகணை தாக்குவதை வீடியோ காட்டுகிறது என்றும், 175 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பெண்கள் பள்ளியின் அருகிலிருந்து புகை எழுவதையும் இந்தக் காட்சிகள் காட்டுகின்றன என்றும் பதிவிட்டார்.