சூடான் நாட்டில் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்த கணவரைக் குத்திக் கொன்ற மனைவிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சூடானைச் சேர்ந்தவர், நவ்ரா ஹூசைன். வயது 19. இவரை அவரது உறவினர் ஒருவருக்கு கடந்த 3 வருடத்துக்கு முன் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். நவ்ராவுக்கு அதில் விருப்பமில்லை. அவர் மேலும் படிக்க வேண்டும் நினைத்தார். இதனால் கணவருடன் அவர் செல்லவில்லை. இந்நிலையில் உறவினர் வீட்டுக்குத் தந்திரமாக அனுப்பப்பட்ட அவர் பின்னர் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு உறவினர்கள் துணையுடன் கணவர் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்.
மறுநாளும் அவர், மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தார். கடுப்பான நவ்ரா, வெறியோடு வந்த கணவரை, கடும் கோபத்தில் கத்தியால் குத்திக் கொன்றார். பின்னர் பெற்றோர் வீட்டுக்குச் சென்று நடந்ததைச் சொன்னார். அவர்கள் நவ்ராவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சரணடைய வைத்தனர்.
இது தொடர்பான வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் நவ்ரா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து நவ்ரா மேல் முறையீடு செய்வதற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு குறித்து நவ்ரா கூறும்போது, ‘இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. எனக்குத் தெரியும் என்னை தூக்கிலிட்டு விடுவார்கள். எனது கனவுகள் நனவாகாமல் போகும்’ என்றார்.
சமூக வலைத்தளங்களில் நவ்ராவுக்கு ஆதரவாகவும் அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கருத்துகள் வலுத்து வருகின்றன. இதற்காக, ஜஸ்டிஸ் பார் நவ்ரா #JusticeForNoura என்ற ஹெஷ்டாக் உருவாக்கப்பட்டுள்ளது.