உலகம்

விமானத்தில் பெண்கள் தனியாக பயணிக்க தடை - தலிபான்கள் உத்தரவு

விமானத்தில் பெண்கள் தனியாக பயணிக்க தடை - தலிபான்கள் உத்தரவு

JustinDurai

ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாக விமானத்தில் பயணிக்க தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச படைகள் வெளியேறிய பின்னர், அப்போதைய அதிபர் அஷ்ரஃப் கானியின் ஆட்சி கலைக்கப்பட்டு, தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து அங்கு 7 மாதங்களாக தலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சி அமைத்த பின்னர் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் அரசு அமல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாக விமானத்தில் பயணிக்க தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.பெண்கள் ஆண் உறவினர்களின் துணையோடுதான் பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளனர்.

முன்னதாக, நீண்ட தூரப் பயணத்துக்கு ஆண்கள் வழித்துணையாக வந்தால் மட்டுமே பெண்கள் தனியாகச் செல்ல முடியும் என்ற கட்டுப்பாட்டை தலிபான் அரசு விதித்தது.

ஆனால், இவையெல்லாம் தற்காலிகமான கட்டுப்பாடுகள் எனக் கூறியுள்ள தலிபான்கள், பணியிடங்களும், கல்வி நிறுவனங்களும் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாறியவுடன் பெண்கள் அனுமதிக்கப்படுவர் என விளக்கமளித்துள்ளனர்.

இதையும் படிக்க: பொழுது போக்கு பூங்காக்களுக்கு ஆண்களும் பெண்களும் ஒன்றாக செல்ல தடை-தலிபான்கள் அதிரடி