ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தம் 15 நாடுகள் உறுப்பினராக இருக்கும் நிலையில், இதில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர் நாடுகள் ஆகும். மீதமுள்ள 10 தற்காலிக உறுப்பினர்கள் 2 ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் ஐநா பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதற்கு முன்னர் இந்தியா 8 முறை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருந்துள்ள சூழலில், தற்போது மீண்டும் இடம்பெற மும்முரம் காட்டி வருகிறது. இம்முறை ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான ஓர் இடத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட இந்தியா களமிறங்கியுள்ள நிலையில், அதே இடத்துக்கு தஜிகிஸ்தான் நாடும் போட்டியில் குதித்துள்ளது.
இதில் இந்தியாவுக்கு அமெரிக்கா, ஆஸ்திரியா, பிஜி மற்றும் இலங்கை போன்ற நாடுகள் ஏற்கெனவே தங்கள் ஆதரவை அறிவித்துள்ளது. ஆனால் 57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, தனது ஒட்டுமொத்த ஆதரவை தஜிகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது இந்தியாவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினர் இடத்தைக் கைப்பற்றுவதற்கான தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரத்தை இந்தியா முறைப்படி தொடங்கியுள்ளது. அடுத்ததாக, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று இந்தியாவுக்கு வாக்களிக்க ஆதரவு கோருவார்கள்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தஜிகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்தாலும், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்கே தங்கள் ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற்றால், அது இந்தியாவின் வெளியுறவுத்துறைக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என்பதால், இந்த தேர்தல் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.