சுனிதா வில்லியம்ஸ் எக்ஸ் தளம்
உலகம்

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி இருக்கும்? சுனிதா சொன்ன சுவாரஸ்ய பதில்!

விண்வெளியில் இருந்து பார்த்தால் இந்தியா அற்புதமாகத் தெரிவதாக சுனிதா வில்லியம்ஸ் பதிலளித்துள்ளார்.

Prakash J

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்புவதாக இருந்த நிலையில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக இருவரும் அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 9 மாதங்களுக்கும் (கிட்டத்தட்ட 286 நாள்கள்) மேலாக அவர்கள் விண்வெளியில் தங்கி இருந்த நிலையில், அவர்களை மீட்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதற்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ட்ரம்ப், அதற்கான முயற்சிகளை, அவரது நண்பர் எலான் மஸ்க்கிடம் ஒப்படைத்து பணிகளைத் துரிதப்படுத்தினார்.

சுனிதா வில்லியம்ஸ்

இதற்காக, இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்காக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசாவும் கைகோர்த்தது. எனினும், அந்தப் பணிகளிலும் சிறுசிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும், இறுதியில், கடந்த மார்ச் 19ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளிவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து SpaceX-ன் டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய 4 விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து நாசா, ”சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 பேரின் மீட்புப் பணிகள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் இல்லாமல் சாத்தியமில்லை” என புகழாரம் சூட்டியிருந்தது.

இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இருந்த தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது அவர் ”விண்வெளியில் இருந்து பார்த்தபோது இந்தியா எப்படித் தோன்றியது” என்று கேள்விக்கு, ​​மிகவும் அற்புதமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர், ”இந்தியா அற்புதமானது. நாங்கள் இமயமலையைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் புட்ச் வில்மோர் உட்பட சக விண்வெளி வீரர்கள் நம்பமுடியாத அளவுக்கு அழகான போட்டோக்களை எடுத்தனர். அது மிகவும் அற்புதமாக இருந்தது. இந்தியா பல்வேறு வண்ணங்களைக் கொண்ட ஒரு நாடாக இருந்தது. நீங்கள் கிழக்கிலிருந்து குஜராத் மற்றும் மும்பை மேலே செல்லும்போது பார்த்தால் அழகிய கடற்கரை தெரியும்.

இரவு நேரங்களில் இந்தியா பெரிய நகரங்களிலிருந்து சிறிய நகரங்கள் ஒளிரும். அதேநேரம் இரவிலும் சரி பகலிலும் சரி என்னை எப்போதும் பிரமிக்க வைப்பது இமயமலை தான். அது எப்போதும் நம்பமுடியாததாக இருக்கும்” எனத் தெரிவித்த அவர், ”இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்கு உதவுவீர்களா” என கேள்விக்கும் உற்சாகப் பதிலளித்துள்ளார். அவர், ”எனது விண்வெளி அனுபவத்தைத் தகவல்களை இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ள நான் ஆர்வமாக இருக்கிறேன். அது ஒரு நாள் நிச்சயம் நடக்கும் என நம்புகிறேன். இந்தியா ஒரு சிறந்த நாடு.. மேலும், அற்புதமான ஜனநாயகம்.. இந்தியா நீண்ட காலமாக விண்வெளியில் கால் பதிக்க முயல்கிறது. அவர்களுக்கு உதவ விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.