sudan war  web
உலகம்

4ஆம் ஆண்டில் சூடான் போர்.. பஞ்சம், பசி என மொத்தம் 59,000 பேர் மரணம்!

சூடானில் நடக்கும் போர் அந்நாட்டு ராணுவத்திற்கும் (SAF) துணை ராணுவப் படையான ஆர்.எஸ்.எஃப் (RSF) அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான அதிகாரப் போட்டியால் உருவானது.

PT WEB

சூடானில் ராணுவம்–துணை ராணுவம் இடையிலான உள்நாட்டுப் போர் நான்காவது ஆண்டில் நீடித்து, தங்கம் உள்ளிட்ட வளங்களை கட்டுப்படுத்தும் போட்டி காரணமாக தீவிரமடைந்துள்ளது. இதுவரை 59 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 90 லட்சம் பேர் நாட்டுக்குள் இடம்பெயர, 45 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் தேடினர். 3 கோடிக்கும் மேற்பட்டோர் மனிதாபிமான உதவிக்காக தவிக்கின்றனர்.

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைகளுக்கும் இடையே வெடித்துள்ள உள்நாட்டுப் போர் தற்போது நான்காவது ஆண்டில் நுழைந்துள்ளது. இந்த மோதல் அந்நாட்டை மிகப்பெரிய பஞ்சத்திற்கும், இடப்பெயர்வு நெருக்கடிக்கும் தள்ளியுள்ளது. இந்தப் போரில் இதுவரை 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஏ.சி.எல்.இ.டி அமைப்பு தெரிவித்துள்ளது. பாதிப்பால் 90 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர்.

sudan people at camps

மேலும் 45 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாகப் புலம்பெயர்ந்துள்ளனர். சுமார் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் மனிதாபிமான உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். அவர்களில் 1.9 கோடி மக்கள் கடும் பசியால் வாடி வருகின்றனர். போரின் விளைவாக 80 லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் தவிப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் இன அழிப்பு, பாலியல் வன்முறை மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் போன்ற போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.