viral video image
viral video image twitter
உலகம்

நிதி வசூல் செய்ய போட்டி என்ற பெயரில் மாணவர்களை இவ்வளவு கேவலமாக நடத்துவதா? அமெரிக்காவில் அதிர்ச்சி!

Prakash J

அமெரிக்காவில் ஒக்லஹோமா மாகாணத்தில் உள்ள Deer Creek பள்ளியில், ஒருவார கால நிதி திரட்டும் சமூக சேவைக்கான பணிகளை மேற்கொண்டு உள்ளது. இதற்காக மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டு பல்வேறு வழிகளில் நிதி சேகரிக்கும் பணி நடைபெற்றுள்ளது. அதில் ஒன்றாக, மாணவர்களின் கால் பெருவிரல்களில் வேர்க்கடலைகள் மூலம் தயாரிக்கப்பட்ட வெண்ணெய்யைத் தடவி விட்டுள்ளனர். அதனை சக மாணவர்கள், தரையில் படுத்தபடி நாக்கால் நக்கி சாப்பிட வேண்டும். இதில், 9 முதல் 12 வரையிலான வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டனர். அவர்களின் கால் பெருவிரல்களில் வேர்க்கடலை வெண்ணெய் தடவப்பட்டது. போட்டி என்ற பெயரில், சக மாணவர்கள் அதனை நக்கி சாப்பிடுகின்றனர். மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சக மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இதுவரை மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றிருப்பதுடன், அதற்கு எதிரான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இதுகுறித்து மாணவர்கள், “எங்களை இப்படி எல்லாம் செய்ய விடுவார்கள் நாங்கள் நினைக்கவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம்" எனத் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள கடிதத்தில், ‘இந்த குறிப்பிட்ட போட்டியின் மூலம் மாணவர்களின் கண்ணியத்தையும், நமது சமூகத்தின் பெருமையையும் நிலைநிறுத்துவதில் தவறிவிட்டோம். அவர்களைப் பாதுகாத்து, நேர்மறையாகக் காண்பிக்கும் பொறுப்பு தங்களுக்கு உள்ளது. நாங்கள் அதைச் செய்யத் தவறிவிட்டோம், அதற்காக நாங்கள் பெரிதும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

இந்த வீடியோ கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி அந்தப் பள்ளியில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி வழியே $152,830.38 (ரூ.1 கோடியே 26 லட்சத்து 61 ஆயிரம்) வசூலிக்கப்பட்டு உள்ளது. பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளனர். எனினும் நிறைய பணம் சேர்ந்ததற்காக, ஒரு சில பெற்றோர் இதற்கு வரவேற்பும் தெரிவித்து உள்ளனர். அந்தப் பளிக்கு அருகேயுள்ள காபி கடை ஒன்றில் வேலைக்கு மாற்றுத்திறனாளிகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வழங்குவதற்காக இந்த நிதி சேகரிக்கும் பணி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.