உலகம்

நடுக்கடலில் தத்தளித்த 104 ரோஹிங்கியா அகதிகள் - முகாமில் அடைக்கலம் கொடுத்த இலங்கை கடற்படை

Sinekadhara

இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த 104 ரோஹிங்கியா மக்கள், மருத்துவப் பரிசோதனைக்குப் பின்பு காங்கேசன் துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கியா இன முஸ்லீம்கள் (மியான்மரில் இராக்கைன் மாநிலத்தின் வடக்கே வசிக்கும் இந்தோ - ஆரிய இனக்குழுவாகும். இவர்கள் ரோகிஞ்சா மொழியைப் பேசுவார்கள்) இந்தோனேசியாவிற்கு பயணித்த போது நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்துள்ளனர்.

இதனைக் கண்ட இலங்கை யாழ்ப்பாணம் மீனவர்கள் அந்நாட்டு கடற்படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று மாலை சம்பவ இடத்திற்குச் சென்ற கடற்படையினர் படகில் இருந்த சிறுவர்கள் குழந்தைகள் என 25 பேரை முதல்கட்டமாக மீட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வந்தனர்.

அதனையடுத்து இன்று காலை படகில் எஞ்சியிருந்த ரோஹிங்கியா மக்கள் அனைவரையும் கடற்படை படகில் ஏற்றி காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வந்தனர். கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்ட 104 பேரும் பங்களாதேஷில் தங்கியிருந்து, பின்னர் அங்கிருந்து படகில் இந்தோனேசியா சென்றபோது இலங்கை கடற்பரப்பிற்குள் படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்துள்ளனர்.

104 பேரும் பங்களாதேஷ் நாட்டில் யு.என்.எச்.சி.ஆரின் பொறுப்பில் இருந்தமைக்கான பதிவு அட்டைகள் மற்றும் உடமைகள் கடற்படையினரிடம் காண்பிக்கப்பட்டது. பின்னர் கடற்படை முகாமிற்கு அரைத்து வரப்பட்ட 104 பேரையும் யாழ்ப்பாணத்தில் உள்ள யு.என்.எச்.சி.ஆரின் பிரதிநிதிகள் மற்றும் தெல்லிப்பளை செயலாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.