உலகம்

இலங்கையில் ஒரு 'மெரினா புரட்சி'- தன்னெழுச்சி போராட்டத்தில் மக்கள்

நிவேதா ஜெகராஜா

இலங்கையில் அரசியல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9வது நாளாக தன்னெழுச்சி போராட்டம் தொடர்கிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க பணமின்றி, மக்கள் பசியும் பட்டினியுமாக தவித்து வருகின்றனர். கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் "கோட்டா கோ கம" என பெயரிட்டு பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும், அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும், நெருக்கடிக்குள்ளான துறைகளை மீட்டெடுக்க வேண்டும், ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

தற்காலிக கூடாரங்களை அமைத்து அவர்கள் தொடர்ந்து 9வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் ஆட்சியாளர்களை கலங்க வைத்திருக்கிறது.