உலகம்

மூடப்படும் இலங்கை பங்குச்சந்தைகள்..! எப்போது திறக்கப்படும்..? 

webteam

கொழும்பு பங்குச்சந்தை ஏப்ரல் 18-ம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு மூடப்படுவதாக பங்குச்சந்தை அமைப்பு அறிவித்திருக்கிறது. பங்குச்சந்தையின் இயக்குநர் குழு மற்றும் பங்குதாரர்கள் இந்த முடிவினை எடுத்திருக்கிறார்கள்.

இலங்கை அரசு நிதி சிக்கலில் மட்டுமல்லாமல் அரசியல்ரீதியாகவும் பெரும் நெருக்கடியில் இருக்கிறது. இலங்கை அதிகாரிகள் குழு நிதி திரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சர்வதேச செலாவணி நிதியத்திடம் (ஐஎம்எப்) இருந்து 400 கோடி டாலர் கடன் தொகையை பெறுவதற்கான திட்டத்தில் இருக்கிறது.

இந்த நாட்டின் கடன் 860 கோடி டாலர்கள் என்னும் அளவில் இருக்கிறது. ஆனால் தற்போது வெளிநாட்டு கடன் செலுத்துவது நிறுத்திவைக்கப்படுகிறது என இலங்கை அறிவித்திருக்கிறது. உணவு மற்றும் எரிபொருள் தேவையே தற்போதைய பிரதான நோக்கமாகும். அதற்கான முயற்சியில் இலங்கை செயல்பட்டுவருகிறது.

அனைத்து தரப்புக்கும் பயன் அளிக்கும் விதமாக பங்குச்சந்தை மூடப்படுகிறது. இன்னும் சில நாட்களில் தெளிவான சூழல் உருவாகும். அப்போது உள்ள பொருளாதார சூழல் குறித்து முடிவெடுத்துக்கொள்ளலாம் என இலங்கை பங்குச்சந்தை ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இதுதவிர திட்டமிடப்பட்ட மின்வெட்டு, எரிபொருள் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்திருப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளையும் இலங்கை எடுத்திருக்கிறது.