இலங்கையில் பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து பள்ளி, கல்லுரிகளும் செயல்படும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 21-ஆம் ஈஸ்டர் திருநாளில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 350க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்புகளின் துயரத்தில் இருந்து இலங்கை இன்னும் மீளவில்லை. வெடிகுண்டு தாக்குதலால் இலங்கையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அங்கு அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. மேலும் இலங்கை செல்வதை தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள் எச்சரிக்கையும் விடுத்தது.
இதனையடுத்து குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய பயங்கரவாதிகளை நாடு முழுவதும் தேடும் பணியில் இலங்கை காவல் மற்றும் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டனர். அதில் 100 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த தொடர் குண்டுவெடிப்பு வெளிநாட்டு பயங்கரவாதிகள் உதவியுடன், உள்நாட்டு பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என இலங்கை அரசு தெரிவித்தது. இதில் தமிழில் பேசும் பயங்கரவாதி ஜக்ரான் ஹாசிம்தான் மூளையாக செயல்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்நிலையில் தாக்குதல் நடந்து 2 வாரங்களான நிலையில் தற்போது பதற்றம் தணிந்து மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதால் மே 6 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் முழு பாதுகாப்புடன் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் அகில விராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டு தீவர சோதனயை மேற்கொண்டு வருகின்றனர்.