86 கிலோ கஞ்சா 86 கிலோ கஞ்சா
உலகம்

தமிழ்நாடு டூ இலங்கை | படகில் கடத்தப்பட்ட 86 கிலோ கஞ்சா பறிமுதல்..!

தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 86 கிலோ கஞ்சா பொட்டலங்களை, இலங்கை வடமராட்சி கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: அ.ஆனந்தன்

தமிழக கடலோர மாவட்டங்கள் இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீபகாலமாக அதிக அளவு கஞ்சா பொட்டலங்கள் கடல் மார்க்கமாக படகில் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இலங்கைக்கு பைபர் படகு மூலம் தமிழகத்தில் இருந்து கஞ்சா மூட்டைகள் கடத்தி வர இருப்பதாக இலங்கை ராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி அடுத்த கட்டைக்காடு ஆழியவளை பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர்.

boat

அப்போது, ஆழியவளை கடற்கரையில் கேட்பாரற்றுக் கிடந்த இரண்டு சாக்கு மூட்டைகளை கைப்பற்றிய ராணுவ புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில், சுமார் 86 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த ராணுவ புலனாய்வுத் துறை அதிகாரிகள் கட்டைக்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கட்டைக்காடு போலீசார் அந்தப் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது கைப்பற்றப்பட்ட கஞ்சா தமிழகத்தில் இருந்து கடல் வழியாக படகு மூலம் கடத்திவரப்பட்டதாகவும், இதன் மதிப்பு சுமார் ரூ.13 லட்சம் இருக்கும் என இலங்கை கட்டைக்காடு போலீசார் தெரிவித்துள்ளனர்.