உலகம்

உளவு செயலி விவகாரம்: இஸ்ரேல் நிறுவனத்துக்கு எதிராக ஆப்பிள் நிறுவனம் வழக்கு

உளவு செயலி விவகாரம்: இஸ்ரேல் நிறுவனத்துக்கு எதிராக ஆப்பிள் நிறுவனம் வழக்கு

Veeramani

ஐபோன்களில், உளவு செயலிகளை நிறுவுவதற்கு எதிராக, இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் மீது ஆப்பிள் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்த பெகாசஸ் மென்பொருள் மூலமாக உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக பொதுமன்னிப்பு சர்வதேச அமைப்பு வெளியிட்ட தகவல் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில், ஐ-போன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், என்.எஸ்.ஓ. நிறுவனம் தனது செயலிகளை ஐ-போன்களில் சட்டவிரோதமாக நிறுவுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்டஈடாக 75 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்தியாவில் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.