குழந்தைகள்  meta ai
உலகம்

சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்தத் தடை.. ஸ்பெயினில் விரைவில் அமலாகும் சட்டம்!

ஸ்பெயினில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு அதிரடித் தடை விதிக்க இருக்கிறது.

Prakash J

ஸ்பெயினில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு அதிரடித் தடை விதிக்க இருக்கிறது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா இத்தகைய தடையை விதித்துள்ள நிலையில், தற்போது ஸ்பெயினும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடையை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடை விதித்த முதல் நாடு ஆஸ்திரேலியா. இதற்கான சட்டம் நவம்பர் 2024இல் நிறைவேற்றப்பட்டது. விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு சுமார் 50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் விதிக்கப்படும். நார்வே சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 15ஆக உயர்த்த முடிவுசெய்துள்ளது.

சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை

பிரான்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் வரும் ஆண்டுகளில் இதற்கான சட்டங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் 18 வயதுக்குட்பட்டவர்களின் தரவுகளைச் சேகரிக்கப் பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கோவா போன்ற மாநிலங்கள் ஆஸ்திரேலிய மாதிரியைப் பின்பற்ற ஆலோசித்து வருகின்றன.

இந்த நிலையில், ஸ்பெயினில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு அதிரடித் தடைவிதிக்க இருக்கிறது. வெறுப்புப் பேச்சு, ஆபாசக் காட்சிகள் மற்றும் போலிச் செய்திகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலக அரசு நிர்வாக உச்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார். இதன்படி, சமூக வலைதள நிறுவனங்கள் பயனர்களின் வயதை உறுதி செய்யும் முறையைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.

model image

மேலும், சட்டவிரோத உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டத்தையும் ஸ்பெயின் அறிமுகப்படுத்துகிறது. அதேநேரத்தில், அதிகப்படியான திரை நேரம் மனச்சோர்வையும் தூக்கமின்மையையும் உண்டாக்குவதுடன், சைபர் புல்லியிங் (Cyber Bullying) எனப்படும் இணைய வழித் துன்புறுத்தல்களுக்குச் சிறுவர்கள் எளிதில் இலக்காவதாக ஆய்வுகள் கூறுகின்றன. என்னதான் சட்டங்கள் இயற்றினாலும், பெற்றோரின் கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வு மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.